உலக வர்த்தக அமைப்பின் (WTO) 14வது அமைச்சர்கள் மாநாடு (MC14) பல்வேறு முக்கிய வர்த்தகப் பிரச்சினைகளில் உடன்பாடு எட்டப்படாமல் முடிந்தது. இதன் முக்கிய விளைவாக, கடந்த 26 ஆண்டுகளாக அமலில் இருந்த இ-காமர்ஸ் மீதான வரி விதிப்பு தற்காலிக தடை (Moratorium) முடிவுக்கு வந்துள்ளது. இது பலதரப்பு வர்த்தக அமைப்பின் (Multilateral Trading System) எதிர்காலம் குறித்த நிச்சயமற்ற தன்மையை அதிகரித்துள்ளது.
1998 முதல் அமலில் இருந்த இந்த தற்காலிக தடை, உறுப்பு நாடுகளை டிஜிட்டல் பரிமாற்றங்களுக்கு (Digital Transmissions) சுங்க வரிகளை (Customs Duties) விதிக்காமல் தடுத்து வந்தது. தற்போது 26 வருடங்களுக்குப் பிறகு இது முதல் முறையாக முடிவுக்கு வந்துள்ளது.
இதற்கு முக்கிய காரணம், அமெரிக்காவிற்கும் பிரேசில் போன்ற நாடுகளுக்கும் இடையேயான கருத்து வேறுபாடு. அமெரிக்கா, தனது தொழில்நுட்பத் துறையைப் பாதுகாக்க இந்த தடையை நிரந்தரமாக நீட்டிக்க விரும்பியது. ஆனால், பிரேசில் விவசாயத் துறையில் சில சலுகைகளை எதிர்பார்த்து, குறைந்த காலத்திற்கு மட்டும் இந்த தடையை நீட்டிக்க கோரியது. இந்தியா, சீனா போன்ற வளரும் நாடுகள், வருவாயைப் பெருக்கவும், டிஜிட்டல் பிளவைக் (Digital Divide) குறைக்கவும் கொள்கை சுதந்திரம் (Policy Space) தேவை என வாதிட்டன.
டிஜிட்டல் வர்த்தக விதிகள், அறிவுசார் சொத்துரிமை பாதுகாப்பு (IP Safeguards) மற்றும் WTO சீர்திருத்தங்கள் குறித்தும் பெரிய நாடுகளுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் நீடித்தன. குறிப்பாக, அமெரிக்கா TRIPS விதி மீறல் புகார் விதிகளை (TRIPS non-violation complaint rules) நீக்க வலியுறுத்தியது. ஆனால், வளரும் நாடுகள் தங்களது உள்நாட்டுக் கொள்கைகளுக்காக இதைத் தக்கவைக்க முயன்றன. இந்தியாவோ, சீனா ஆதரிக்கும் முதலீட்டு எளிமயமாக்கல் ஒப்பந்தத்தை (Investment Facilitation Agreement) சேர்ப்பதை தடுத்தது.
இந்த முட்டுக்கட்டைகள், உலகப் பொருளாதார அதிகார மாற்றங்களையும், வளர்ந்து வரும் பாதுகாப்புவாதப் (Protectionism) போக்கையும் பிரதிபலிக்கின்றன. WTO-வின் ஒருமித்த கருத்து அடிப்படையிலான முடிவெடுக்கும் முறை, இன்றைய டிஜிட்டல் வர்த்தக யுகத்தில் சிக்கல்களை ஏற்படுத்துவதாகக் கருதப்படுகிறது. அமெரிக்காவின் இந்த நிலைப்பாடு, WTO-வின் முக்கியத்துவத்தைக் குறைத்து, பிராந்திய மற்றும் பலதரப்பு (Plurilateral) ஒப்பந்தங்களை நோக்கி நாடுகளைத் திருப்பக்கூடும். இ-காமர்ஸ் வரி தடை முடிவுக்கு வந்திருப்பது, உலக டிஜிட்டல் பொருளாதாரத்தை துண்டாடக்கூடும் (fragment) என்றும், வணிகர்களுக்கும் நுகர்வோருக்கும் செலவுகளை அதிகரிக்கக்கூடும் என்றும் அஞ்சப்படுகிறது. குறிப்பாக, வளரும் நாடுகளில் அத்தியாவசியத் தேவைகளுக்கான கொள்கைகள், வெளிநாட்டு சவால்களை எதிர்கொள்ள நேரிடலாம்.
ஜெனிவாவில் அடுத்த கட்டப் பேச்சுவார்த்தைகள் தொடரும் என எதிர்பார்க்கப்பட்டாலும், ஆழமான கருத்து வேறுபாடுகள் காரணமாக, விரைவில் ஒருமித்த கருத்து ஏற்படுவது கடினமே. இதன் விளைவாக, பிராந்திய ஒப்பந்தங்கள் மற்றும் கூட்டணிகள் வலுப்பெற்று, உலக வர்த்தக ஒழுங்கு மேலும் துண்டாடப்படும் எனத் தெரிகிறது. MC14-ன் தோல்வி, WTO ஒரு பெரிய நெருக்கடியைச் சந்திப்பதைக் காட்டுகிறது.