அமெரிக்கா மற்றும் கனடா அதிகாரிகள், காலிஸ்தான் ஆதரவாளர் Gurpatwant Singh Pannun-க்கு மீண்டும் உயிருக்கு ஆபத்து இருப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர். வரும் நவம்பர் 20-ம் தேதி Nikhil Gupta-வுக்கு தண்டனை அறிவிக்கப்படவுள்ள நிலையில் இந்த சூழல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கா மற்றும் கனடா நாட்டு பாதுகாப்பு முகமைகள், காலிஸ்தான் ஆதரவாளரான Gurpatwant Singh Pannun-க்கு மீண்டும் பாதுகாப்பு எச்சரிக்கைகளை விடுத்துள்ளன. 'Duty to Warn' சட்டத்தின் கீழ், அவருக்கு விடுக்கப்பட்டுள்ள இந்த மிரட்டல்கள் மிகவும் நம்பகமானவை என்பதால், பயணங்களைத் தவிர்க்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். கடத்தல் மற்றும் வன்முறை அபாயங்கள் உள்ளதாக உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
Nikhil Gupta வழக்கின் பின்னணி
இந்த விவகாரத்தின் மையப்புள்ளியாக கருதப்படும் Nikhil Gupta, கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்க நீதிமன்றத்தில் தனது மீதான குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார். 2023-ல் Gurpatwant Singh Pannun-ஐ கொல்லத் திட்டமிட்டதாக அவர் மீது கொலை ஒப்பந்தம் (Murder-for-hire), சதி மற்றும் பணமோசடி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டது. முன்னதாக செப்டம்பர் மாதம் நடைபெறவிருந்த தீர்ப்பு, பாதிக்கப்பட்டவர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்ற கோரிக்கையைத் தொடர்ந்து நவம்பர் 20-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ராஜதந்திர உறவுகளில் பாதிப்பு
இந்த சட்ட நடவடிக்கைகள் வெறுமனே ஒரு குற்றவியல் வழக்கோடு முடிந்துவிடவில்லை. இது இந்தியா, அமெரிக்கா மற்றும் கனடா இடையேயான ராஜதந்திர உறவுகளில் தொடர் உராய்வை ஏற்படுத்தி வருகிறது. இந்திய அரசு இந்த நபரை ஒரு பயங்கரவாதியாக அறிவித்துள்ள நிலையில், இந்த விவகாரம் இருதரப்பு வர்த்தகம் மற்றும் விசா விதிமுறைகளில் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக ஜியோபாலிட்டிக்கல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக சர்வதேச சமூகம் உற்றுநோக்கிக் கொண்டிருக்கிறது.
