இந்தியாவில் உள்ள வாகன ஓட்டிகள், சரியாக டயர் பிரஷர் பராமரிக்காததால் ஆண்டுக்கு ₹4,500 கோடி நஷ்டத்தை சந்திக்கிறார்கள். இது பெட்ரோல் இழப்பு மட்டுமல்ல, உங்கள் வாகனத்தின் பாதுகாப்புக்கும் ஆபத்து.
இந்தியாவில் வாகனம் ஓட்டுபவர்கள், ஒரு சின்ன விஷயத்தை கவனிக்காமல் விடுவதால், ஒவ்வொரு ஆண்டும் ₹4,500 கோடி பணத்தை இழக்கிறார்கள். அது என்ன விஷயம் என்றால், டயர்களில் காற்றழுத்தம் (Tyre Pressure) சரியாக இல்லாததுதான்.
இந்திய வாகன டயர் உற்பத்தியாளர்கள் சங்கம் (ATMA) கீழ் செயல்படும் இந்திய டயர் டெக்னிக்கல் அட்வைசரி கமிட்டி (ITTAC) நடத்திய ஆய்வு ஒன்றில், இந்தியாவில் ஓடும் பெரும்பாலான வாகனங்களில், உற்பத்தியாளர்கள் பரிந்துரைத்த அளவை விட குறைவான காற்றழுத்தமே உள்ளது தெரியவந்துள்ளது.
எவ்வளவு மோசமாக இருக்கிறது நிலை?
சுமார் 1.3 லட்சத்துக்கும் அதிகமான பயணிகள் வாகனங்களில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இதில், 32% டயர்களில், தேவையான அளவை விட 20% குறைவாக காற்று இருந்தது. மேலும் 21% டயர்களில் 10% முதல் 20% வரை காற்று குறைவாக இருந்துள்ளது.
மைலேஜ் பாதிப்பும் பொருளாதார இழப்பும்
சரியான காற்றழுத்தம் இல்லாதபோது, டயர்களின் ரோலிங் ரெசிஸ்டன்ஸ் (Rolling Resistance) அதிகரிக்கிறது. இதனால் என்ஜின் அதிக வேலை செய்ய வேண்டியுள்ளது. இதன் விளைவாக, மைலேஜ் குறைகிறது. ஒரு PSI (Pound per Square Inch) காற்றழுத்தம் குறைந்தாலே, மைலேஜ் சுமார் 0.2% குறையும் என்று கூறப்படுகிறது. இது இந்தியாவில் உள்ள லட்சக்கணக்கான வாகனங்களுக்குப் பொருந்தும்போது, ஒட்டுமொத்த எரிபொருள் சிக்கனத்தில் 0.75% குறைவை ஏற்படுத்துகிறது. இந்த ₹4,500 கோடி என்பது பெட்ரோல் வாகனங்களுக்கான இழப்பு மட்டுமே. டீசல், சிஎன்ஜி, எல்பிஜி வாகனங்களையும் சேர்த்தால் இந்த இழப்பு இன்னும் அதிகமாக இருக்கும்.
பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு சிக்கல்கள்
வீட்டு பட்ஜெட்டை பாதிப்பது மட்டுமல்லாமல், சரியாக காற்றழுத்தம் இல்லாத டயர்கள் வாகனத்தின் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாக அமைகின்றன. டயர் சரியாக காற்றழுத்தத்துடன் இல்லையென்றால், அது சுழலும்போது அதிகப்படியாக வளைந்து, அதிக வெப்பத்தை உருவாக்கும். இந்த வெப்பம் டயரின் ரப்பரை விரைவாக சிதைத்து, தேய்மானத்தை அதிகரிக்கும். இதனால், உரிமையாளர்கள் அடிக்கடி டயர்களை மாற்ற வேண்டியிருக்கும், பராமரிப்பு செலவும் கூடும்.
பாதுகாப்பைப் பொறுத்தவரை, இது மிக முக்கியமானது. டயர் காற்றழுத்தம் சரியாக இல்லையென்றால், வாகனத்தின் கட்டுப்பாடு (Handling) பாதிக்கப்படும், பிரேக் பிடிக்கும் தூரம் அதிகரிக்கும். மேலும், நெடுஞ்சாலைகளில் செல்லும்போது திடீரென டயர் வெடிக்கும் அபாயமும் உண்டு. எரிபொருள் நுகர்வு அதிகரிப்பதால், வாகன புகையிலிருந்து வெளியாகும் மாசுகளும் அதிகரிக்கிறது.
வாகன உற்பத்தியாளர்கள் மற்றும் டயர் நிறுவனங்கள், இதுகுறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி, சீரான இடைவெளியில் டயர் பிரஷரை சரிபார்க்க வலியுறுத்துகின்றனர். இது செலவை மிச்சப்படுத்துவதோடு, வாகனத்தின் செயல்திறனையும் பாதுகாப்பையும் மேம்படுத்தும்.
