இந்த மழைக்காலம் விமான பயணிகளுக்கு கொஞ்சம் கஷ்டத்தை கொடுக்கலாம். விமானங்கள் ரத்தாகலாம் அல்லது தாமதமாகலாம். ஆனால், DGCA விதிப்படி, உங்களுக்கு முழு ரீஃபண்ட் (Refund) அல்லது மாற்று விமானம் நிச்சயம் உண்டு. இதனால பண இழப்பீடு கிடையாது என்றாலும், உணவு, தங்கும் வசதி எல்லாம் ஏர்லைன்ஸ் கொடுக்கணும்.
மழைக்கால விமானப் பிரச்சனைகள்: பயணிகள் உரிமைகள் என்ன?
இந்தியாவில் ஆண்டுதோறும் பெய்யும் கனமழை மற்றும் இடியுடன் கூடிய புயல் காரணமாக, முக்கிய விமான நிலையங்களில் விமானப் பயணங்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றன. இப்படி திடீரென வானிலை காரணமாக விமானங்கள் ரத்து செய்யப்படும்போது, பயணிகள் தங்களின் உரிமைகளைத் தெரிந்து வைத்திருப்பது மிகவும் அவசியம். பயணிகளுக்கு சிரமம் ஏற்பட்டாலும், சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) இதற்கென ஒரு தெளிவான வழிகாட்டுதலை வகுத்துள்ளது.
'Force Majeure' என்றால் என்ன? இழப்பீடு உண்டா?
கடுமையான வானிலை காரணமாக விமானங்கள் தாமதமானால் அல்லது ரத்து செய்யப்பட்டால், அது 'force majeure' எனப்படும் இயற்கைப் பேரிடர் பிரிவின் கீழ் வரும். அதாவது, விமான நிறுவனங்களின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட காரணங்களால் இந்த தாமதங்கள் ஏற்படுகின்றன. எனவே, இதுபோன்ற நேரங்களில் வழக்கமான பண இழப்பீடு (Monetary Compensation) வழங்க வேண்டியதில்லை.
ஆனால், இது விமானங்களில் ஏற்படும் தொழில்நுட்பக் கோளாறுகள் அல்லது செயல்பாட்டுக் குறைபாடுகளால் ஏற்படும் தாமதங்களிலிருந்து வேறுபடுகிறது. அந்தச் சூழ்நிலைகளில், விமான நிறுவனங்கள் சில குறிப்பிட்ட சட்டங்களுக்கு உட்பட்டு அபராதம் செலுத்த வேண்டியிருக்கும்.
தாமதம் மற்றும் ரத்து சமயங்களில் என்னென்ன உரிமைகள் உள்ளன?
பண இழப்பீடு இல்லை என்றாலும், பயணிகளுக்கு ரீஃபண்ட் மற்றும் உதவி பெறுவதற்கான உரிமைகள் தெளிவாக உள்ளன. மழைக்காலக் காரணங்களால் விமானம் ரத்து செய்யப்பட்டால், விமான நிறுவனம் பயணிகளுக்கு டிக்கெட் தொகையை முழுமையாகத் திரும்பத் தர வேண்டும் அல்லது அதற்குப் பதிலாக வேறொரு விமானத்தில் பயணிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இந்த இரண்டு விருப்பங்களில் எதைத் தேர்ந்தெடுப்பது என்பது பயணிகளின் முடிவைப் பொறுத்தது.
மேலும், விமான நிலையங்களில் நீண்ட நேரம் காத்திருக்க நேரிடும் பயணிகளுக்கு, விமான நிறுவனங்கள் அத்தியாவசிய உதவிகளை வழங்கக் கடமைப்பட்டுள்ளன. இதில் சிற்றுண்டி, உணவு மற்றும் இரவு தங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் ஹோட்டல் வசதி, அதற்கான போக்குவரத்து ஆகியவையும் அடங்கும். பயணிகளின் சிரமத்தைக் குறைக்கும் நோக்கில் இந்த வசதிகள் வழங்கப்படுகின்றன.
ரீஃபண்ட் பெறுவது எப்படி?
டிக்கெட் ஆன்லைன் டிராவல் போர்ட்டல்கள் அல்லது மூன்றாம் தரப்பு முகவர்கள் மூலம் வாங்கப்பட்டிருந்தாலும், விமானத்தை இயக்கும் நிறுவனமே ரீஃபண்டிற்குப் பொறுப்பு என DGCA விதிகள் வலியுறுத்துகின்றன. இந்த ரீஃபண்ட் தொகையை 14 வேலை நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட நிறுவனம் வழங்க வேண்டும். ரீஃபண்ட் பெற, பயணிகள் நேரடியாக விமான நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம், மொபைல் ஆப் அல்லது வாடிக்கையாளர் சேவை மையத்தை அணுக வேண்டும். புரோக்கர் வழியாக புக் செய்திருந்தால், அவர்கள் வழியாகவே கோரிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும்.
ஒருவேளை விமான நிறுவனம் இந்த விதிகளை மதிக்காமல், தேவையான உதவிகளை வழங்கத் தவறினால், பயணிகள் புகார் அளிக்கலாம். முதலில், விமான நிறுவனத்தின் உள் குறை தீர்க்கும் முறையைப் பயன்படுத்தலாம். அப்போதும் தீர்வு கிடைக்கவில்லை என்றால், அரசு நடத்தும் 'AirSewa' போர்ட்டலில் புகார் பதிவு செய்யலாம். இறுதியாக, நுகர்வோர் குறை தீர்க்கும் ஆணையத்தின் உதவியை நாடலாம்.
