கடலோர வணிகத்தில் வெளிநாட்டு கப்பல்களை கட்டுப்படுத்தும் திட்டத்தை மத்திய துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சகம் கைவிட்டுள்ளது. 2018-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தளர்வுகளை காலவரையின்றி நீட்டித்துள்ளதால், உள்நாட்டு கப்பல் நிறுவனங்களுக்கு கடும் போட்டி தொடரும் சூழல் உருவாகியுள்ளது.
மத்திய துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சகம், கடந்த ஜனவரி மற்றும் மார்ச் 2026-ல் கொண்டு வர உத்தேசித்திருந்த கடுமையான கட்டுப்பாடுகளை வாபஸ் பெற்றுள்ளது. இதன் மூலம், 2018-ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட தளர்வுகள் தொடர்ந்து நீடிக்கும். அதாவது, வெளிநாட்டு கொடியுடன் கூடிய கப்பல்கள் இந்திய துறைமுகங்களுக்கு இடையே சரக்குகளை ஏற்றிச் செல்ல தொடர்ந்து அனுமதி உண்டு. உலகளாவிய கடல்சார் சிக்கல்கள் மற்றும் விநியோகச் சங்கிலியில் (Supply Chain) எவ்வித தடையுமின்றி சரக்கு போக்குவரத்தை உறுதி செய்யவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
போட்டி மற்றும் செலவு சவால்
உள்நாட்டு கப்பல் நிறுவனங்கள் இந்த அறிவிப்பால் சற்று ஏமாற்றம் அடைந்துள்ளன. வெளிநாட்டு கப்பல்களின் வருகை குறையும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், தற்போதைய நிலை தொடர்வது அவர்களுக்கு சவாலாகவே இருக்கும். இந்தியக் கொடியுடன் இயங்கும் கப்பல்களை விட, வெளிநாட்டுக் கொடியுடன் இயங்கும் கப்பல்களின் செயல்பாட்டு செலவு 16% முதல் 20% வரை குறைவு. அதிக வரி மற்றும் பராமரிப்பு செலவுகள் காரணமாக இந்திய நிறுவனங்களால் சர்வதேச நிறுவனங்களின் விலையோடு போட்டி போட முடிவதில்லை.
$75 பில்லியன் சரக்கு கட்டண சுமை
இந்தியா ஆண்டுதோறும் வெளிநாட்டு கப்பல் நிறுவனங்களுக்கு சுமார் $75 பில்லியன் சரக்கு கட்டணமாக செலுத்துகிறது. இதை குறைக்க, அடுத்த 5 ஆண்டுகளில் 100 புதிய கப்பல்களை இந்திய கப்பல் படையில் சேர்க்க அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இருப்பினும், இந்த திட்டம் வெற்றியடைய வேண்டுமெனில், இந்தியக் கப்பல்களின் செயல்பாட்டு செலவை குறைப்பதற்கான வரிச் சலுகைகள் மற்றும் கொள்கை மாற்றங்கள் மிக அவசியம். அரசு இந்த துறையில் கொண்டு வரப்போகும் அடுத்தடுத்த மாற்றங்களை முதலீட்டாளர்கள் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும்.
