கண்டெய்னர் உற்பத்திக்கு உலகத் தரம்
பட்ஜெட் 2026-ல், கண்டெய்னர் உற்பத்தி துறையில் இந்தியாவை வலுப்படுத்த ₹10,000 கோடி நிதியுதவியுடன் ஒரு பிரத்யேக திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், அடுத்த 5 ஆண்டுகளில் ஒரு உலகத் தரம் வாய்ந்த கண்டெய்னர் உற்பத்தி சூழலை இந்தியாவில் உருவாக்குவதை இலக்காகக் கொண்டுள்ளனர். இதன் மூலம், சர்வதேச வர்த்தகத்தில் இந்தியாவின் போட்டித்தன்மையை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உள்கட்டமைப்பு விரிவாக்கமும், புதிய வழித்தடங்களும்
இந்தியாவின் லாஜிஸ்டிக்ஸ் (Logistics) கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில், பட்ஜெட்டில் பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. கிழக்கில் உள்ள டான்குனி (Dankuni) பகுதியையும், மேற்கில் உள்ள சூரத் (Surat) பகுதியையும் இணைக்கும் வகையில் ஒரு புதிய 'Dedicated Freight Corridor' (சரக்கு சிறப்பு வழித்தடம்) அமைக்கப்பட உள்ளது. இது சரக்கு போக்குவரத்தை அதிவேகமாக மாற்றியமைக்கும்.
நீர்வழிப் பாதைகளின் அதிரடி வளர்ச்சி
அதேபோல், அடுத்த 5 ஆண்டுகளில் 20 புதிய தேசிய நீர்வழிப் பாதைகள் (National Waterways) பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட உள்ளன. இதில், ஒடிசாவில் உள்ள NW-5 நீர்வழிப் பாதையை முதலில் செயல்பாட்டுக்கு கொண்டு வந்து, முக்கிய தொழிற்சாலை மற்றும் கனிமப் பகுதிகளை துறைமுகங்களுடன் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனால், கடல் மற்றும் நீர்வழிப் போக்குவரத்து மூலம் சரக்கு கையாளும் அளவு 6% என்பதிலிருந்து 12% ஆக 2047-க்குள் உயர்த்தப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்காக Coastal Cargo Promotion Scheme-ம் அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு நீர் வழித்தடங்களுக்கு ஊக்கம்
மேலும், வாரணாசி மற்றும் பாட்னாவில், உள்நாட்டு நீர்வழிப் பாதைகளுக்கான கப்பல் பழுதுபார்க்கும் (Ship Repair) சூழல் அமைப்பை உருவாக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக, பிராந்திய அளவிலான சிறந்த பயிற்சி மையங்கள் (Regional Centres of Excellence) அமைக்கப்பட்டு, நீர்வழித் துறையில் வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், இளைஞர்களுக்குப் பயிற்சி அளிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சீ-பிளேன் உற்பத்திக்கு மானியம்
சுற்றுலா மற்றும் கடைசி மைல் இணைப்பை (Last-mile connectivity) மேம்படுத்தும் நோக்கில், உள்நாட்டில் சீ-பிளேன் (Seaplane) உற்பத்தி செய்வதை ஊக்குவிக்க, Seaplane VGF Scheme மூலம் மானியமும் வழங்கப்படும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.