அமெரிக்க ராணுவ வீரர்களின் நடமாட்டத்தை வெளிநாட்டு உளவு அமைப்புகள் கண்காணிப்பதைத் தடுக்க, அரசு வழங்கிய சாதனங்களில் அட்வர்டைசிங் டிராக்கிங்கை (Ad tracking) முழுமையாக முடக்கியுள்ளது அமெரிக்க பாதுகாப்புத் துறை (U.S. Department of Defense).
அமெரிக்க ராணுவத்தின் இந்த புதிய கொள்கை முடிவு, Army, Air Force, Navy, மற்றும் Marine Corps ஆகிய அனைத்து பிரிவுகளுக்கும் பொருந்தும். அரசு வழங்கிய ஸ்மார்ட்போன்கள் மற்றும் கம்ப்யூட்டர்களில் உள்ள 'அட்வர்டைசிங் ஐடென்டிஃபையர்களை' (Advertising Identifiers) நீக்குவதன் மூலம், பயனர்களின் இருப்பிடத் தகவல்கள் திருடப்படுவதைத் தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தரவு புரோக்கர்களின் அச்சுறுத்தல்
வணிக ரீதியான டேட்டா புரோக்கர்களிடம் இருந்து, ராணுவ வீரர்களின் இருப்பிடத் தகவல்களை வெளிநாட்டு சக்திகள் பணம் கொடுத்து வாங்கி வந்ததே இந்த முடிவுக்கு முக்கிய காரணம். குறிப்பாக, மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள ராணுவத் தளங்களில் பணிபுரியும் வீரர்களின் ஒவ்வொரு அசைவையும் ஆப்ஸ் (Apps) மூலம் சேகரிக்கும் ஆபத்து இருந்தது. இனி இந்தத் தடைகள் மூலம் தேவையற்ற தரவு கசிவுகள் தடுக்கப்படும்.
தனிப்பட்ட சாதனங்களில் தொடரும் ஆபத்து
இருப்பினும், செனட்டர் Ron Wyden போன்றவர்கள் ஒரு முக்கிய எச்சரிக்கையை விடுத்துள்ளனர். இந்தத் தடை ராணுவ அதிகாரப்பூர்வ சாதனங்களுக்கு மட்டுமே. ராணுவ வீரர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் பயன்படுத்தும் தனிப்பட்ட செல்போன்களில் ஆப்ஸ் தொடர்ந்து தரவுகளைச் சேகரித்து வருகின்றன. இது இன்னும் ஒரு பெரிய பாதுகாப்பு ஓட்டையாகவே உள்ளது.
முதலீட்டாளர்கள் கவனத்திற்கு
இந்தத் தடையானது டேட்டா ப்ரோக்கரேஜ் (Data Brokerage) துறையில் புதிய அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. தரவு விற்பனையை நம்பி இயங்கும் நிறுவனங்களுக்கு இது ஒரு எச்சரிக்கை மணி. இனி வரும் காலங்களில், தரவு பாதுகாப்பு தொடர்பாக இன்னும் கடுமையான சட்டங்கள் மற்றும் விதிமுறைகள் கொண்டுவரப்படலாம். எனவே, டெக் மற்றும் சைபர் செக்யூரிட்டி துறைகளில் முதலீடு செய்திருப்பவர்கள், இத்தகைய அரசாங்க கட்டுப்பாடுகள் அந்த நிறுவனங்களின் லாபத்தை (Revenue Model) எவ்வாறு பாதிக்கும் என்பதைக் கூர்ந்து கவனிக்க வேண்டும்.
