கேமரா பொருத்தப்பட்ட ஸ்மார்ட் கிளாஸ்கள் பொதுமக்களின் பிரைவசியை பாதிப்பதாகக் கூறி, அவற்றை தடை செய்ய நார்வே அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது. இதனால் Meta மற்றும் Snap போன்ற முன்னணி நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கு பெரும் சவால் எழுந்துள்ளது.
பொது இடங்களில் தனிமனித சுதந்திரம் மற்றும் பிரைவசியைப் பாதுகாக்கும் நோக்கில், கேமரா வசதி கொண்ட ஸ்மார்ட் கிளாஸ்கள் மற்றும் ஏஐ (AI) அடிப்படையிலான அணியக்கூடிய சாதனங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க நார்வே அரசு திட்டமிட்டுள்ளது. பொது இடங்களில் முகம் அடையாளம் காணும் (Facial recognition) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் கருவிகளுக்கு முழுமையான தடை விதிக்கவும் அந்நாட்டு டிஜிட்டல் அமைச்சகம் பரிசீலித்து வருகிறது.
டெக் நிறுவனங்களுக்கு சிக்கல்
இந்த கட்டுப்பாடு Meta மற்றும் Snap போன்ற உலகளாவிய ஜாம்பவான்களுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே, நார்வே நுகர்வோர் கவுன்சில், முறையான சட்ட விதிகள் வகுக்கப்படும் வரை இத்தகைய தயாரிப்புகளை விற்பனை செய்வதை நிறுத்தும்படி சில்லறை விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
முதலீட்டாளர்கள் கவனத்திற்கு
இந்த முடிவு நார்வேயில் தொடங்கினாலும், ஐரோப்பிய ஒன்றியத்தின் மற்ற நாடுகளுக்கும் இது பரவ வாய்ப்புள்ளது. இத்தகைய கடும் சட்டங்களால், நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை மாற்றி வடிவமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். இது நிறுவனங்களின் செலவை அதிகரிப்பதுடன், புதிய சாதனங்களின் சந்தை மதிப்பையும் குறைக்கலாம். தற்போது நார்வே அரசு இதற்காக ஒரு சிறப்பு நிபுணர் குழுவை அமைத்து, GDPR போன்ற சட்ட விதிகளின் கீழ் இதை எப்படி ஒழுங்குபடுத்தலாம் என ஆய்வு செய்து வருகிறது. வரும் காலங்களில் இந்த குழு எடுக்கும் முடிவுகள், டெக் நிறுவனங்களின் பங்குகளில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும்.
