இந்திய தேசிய கட்டண கழகம் (NPCI) ஒரு புதிய முயற்சியாக 'Unified Agent Protocol' (UAP) என்ற அமைப்பை உருவாக்கி வருகிறது. இதன் மூலம், இனி ஆர்ட்டிபிஷியல் இன்டலிஜென்ஸ் (AI) அசிஸ்டன்ட்கள் கூட UPI பேமெண்ட்களை செய்யும் சாத்தியம் உருவாகியுள்ளது. இதன் முக்கிய நோக்கம், பயனர்கள் அனுமதிக்கும் வரம்பிற்குள், அங்கீகரிக்கப்பட்ட AI ஏஜெண்டுகள் பணப் பரிவர்த்தனைகளை முடிக்க உதவுவதுதான். இது டிஜிட்டல் பேமெண்ட்டுகளை மேலும் வேகப்படுத்தும்.
AI-யை வைத்து பேமெண்ட்ஸ்!
இந்திய தேசிய கட்டண கழகம் (NPCI) தற்போது UPI பேமெண்ட் சிஸ்டத்தில் ஆர்ட்டிபிஷியல் இன்டலிஜென்ஸை (AI) ஒருங்கிணைக்க 'Unified Agent Protocol' (UAP) என்ற புதிய கட்டமைப்பை உருவாக்கி வருகிறது. தற்போதுள்ள நிலையில், AI டூல்ஸ் வாங்குவதற்கு பொருட்களை தேடுவது, விலைகளை ஒப்பிடுவது, பயண டிக்கெட்களை புக் செய்வது போன்ற வேலைகளை செய்தாலும், இறுதி கட்ட பேமெண்ட் செய்வதற்கு பயனர்களின் நேரடி உதவி தேவைப்படுகிறது. இந்த நிலை மாற NPCI-ன் இந்த புதிய முயற்சி உதவும்.
பரிவர்த்தனைகளுக்கு AI
UAP என்பது, UPI சிஸ்டத்தின் மேல் செயல்படும் ஒரு பாதுகாப்பு அடுக்காக (Secure Verification Layer) வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் முக்கிய இலக்கு, அங்கீகரிக்கப்பட்ட AI ஏஜெண்டுகள், பயனர்களிடமிருந்து பெறும் குறிப்பிட்ட அனுமதிகளின் அடிப்படையில் பணப் பரிவர்த்தனைகளைத் தொடங்குவதாகும். இது தற்போதுள்ள UPI சிஸ்டத்தை மாற்றாமல், அதன் பாதுகாப்பு தரங்களுடன் இணைந்து செயல்படும். ஒரு AI ஏஜென்ட் பேமெண்ட் செய்ய வேண்டுமென்றால், இந்த சரிபார்ப்பு அடுக்கை கடந்து செல்ல வேண்டும். இது AI ஏஜென்ட்டின் நம்பகத்தன்மையையும், பயனரின் ஒப்புதலையும் உறுதி செய்யும்.
ஆட்டோமேஷன் மற்றும் பாதுகாப்பு சமநிலை
UAP-ன் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்று, செலவினக் கட்டுப்பாடுகளை (Spending Controls) செயல்படுத்துவதாகும். NPCI, இந்த நெறிமுறையை தற்போதைய UPI ஆட்டோபே (AutoPay) வசதியைப் போலவே கட்டமைக்க திட்டமிட்டுள்ளது. இதில், பயனர்கள் தானியங்கி பரிவர்த்தனைகளுக்கு முன்னரே நிர்ணயிக்கப்பட்ட வரம்புகளை அமைப்பார்கள். இதன் மூலம், AI ஏஜெண்டுகளுக்கு உங்கள் வங்கி கணக்கில் கட்டுப்பாடற்ற அணுகல் இருக்காது. பயனர் அமைத்த நிதி வரம்புகளுக்குள் மட்டுமே பேமெண்ட்களை செய்ய முடியும்.
இந்த ஆட்டோமேஷன் மூலம் ஆன்லைன் ஷாப்பிங் மற்றும் பில் பேமெண்ட்கள் எளிதாகலாம். அதே சமயம், இது புதிய ஆபத்துகளையும் கொண்டுள்ளது. அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனை முயற்சிகள், தீங்கிழைக்கும் AI ஏஜெண்டுகளின் உருவாக்கம், தவறுகள் நடந்தால் பொறுப்பை கண்டறிவதில் உள்ள சிக்கல்கள் போன்றவற்றை ரிசர்வ் வங்கி (RBI) உன்னிப்பாக கவனிக்கும்.
இந்த திட்டத்தின் அடுத்த கட்டமாக, அதன் பாதுகாப்பு கட்டமைப்பு முறைப்படுத்தப்படும். மேலும், AI சேவை வழங்குநர்கள் எவ்வாறு அங்கீகரிக்கப்பட்ட ஏஜெண்டுகளாக பதிவு செய்ய வேண்டும் என்பதற்கான வழிகாட்டுதல்கள் உருவாக்கப்படும். முதலீட்டாளர்கள் மற்றும் தொழில்துறை சார்ந்தவர்கள் இதன் இறுதி வெளியீட்டு விவரங்களை உன்னிப்பாக கவனிப்பார்கள். இது ஃபின்டெக் நிறுவனங்கள் மற்றும் இ-காமர்ஸ் தளங்கள் தங்கள் வாடிக்கையாளர் செயலிகளில் (Apps) AI சார்ந்த செக்-அவுட் அனுபவங்களை எவ்வாறு ஒருங்கிணைக்கின்றன என்பதை பாதிக்கக்கூடும்.
