சீனாவின் புதிய சப்ளை செயின் கட்டுப்பாடுகள், இந்தியாவின் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தித் துறையில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. தங்கள் நாட்டின் உற்பத்தித் திறனை தக்கவைக்கும் நோக்கில், முக்கிய இயந்திரங்கள் மற்றும் உதிரி பாகங்களின் ஏற்றுமதியை சீனா கடுமையாகக் கட்டுப்படுத்தியுள்ளது. இந்த நடவடிக்கைகளால், இந்தியாவில் புதிய காம்போனென்ட் தொழிற்சாலைகள் அமைப்பது மற்றும் தற்போதுள்ள தொழிற்சாலைகளை விரிவாக்குவது பாதிக்கப்படும் என தொழிற்சாலை நிர்வாகிகள் எச்சரித்துள்ளனர்.
சப்ளை செயின் பாதிப்பு அம்பலம்
முன்னணி எலக்ட்ரானிக்ஸ் நிறுவனங்களின் உயர் அதிகாரிகள், சீன சப்ளையர்களிடம் இருந்து உபகரணங்கள் கிடைப்பது குறித்து விளக்கம் கேட்டு வருகின்றனர். மூலோபாய சப்ளை செயின்கள் மற்றும் தொழில்துறை இயந்திரங்கள் மீது சீனா இறுக்கும் கட்டுப்பாடு, இந்தியாவின் தொழில்துறை ஸ்திரத்தன்மை, முதலீடு மற்றும் ஏற்றுமதி வளர்ச்சி குறித்து கவலைகளை எழுப்பியுள்ளது. இந்திய எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திடம் (MeitY) தொழிற்சாலை தரப்பில் முறையிடப்பட்டுள்ளது. சீனாவின் புதிய ஏற்றுமதி விதிமுறைகளால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்த விவரங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
அரசின் பதில் என்ன?
முந்தைய சீன ஏற்றுமதி தடைகளைப் போலவே, இந்திய அரசு தலையிடக்கூடிய வாய்ப்புகள் குறைவாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிகாரிகள் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து, தொழில் துறையினருடன் கலந்தாலோசித்து வருகின்றனர். இறக்குமதி செய்யப்பட்ட இயந்திரங்கள் மற்றும் உதிரி பாகங்களை பெரிதும் நம்பியிருக்கும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், இந்த கட்டுப்பாடுகளால் கடுமையாக பாதிக்கப்படலாம் என்று ஒரு நிர்வாகி பெயர் குறிப்பிட விரும்பாமல் தெரிவித்தார். டாடா எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஃபாக்ஸ்கான் போன்ற பெரிய நிறுவனங்களும் சாத்தியமான பாதிப்புகளுக்கு தயாராகி வருகின்றன.
தொழில்நுட்ப சார்புநிலை அதிகரிப்பு
சீனாவின் 834 மற்றும் 835 ஆணைப்பத்திரங்கள், புவிசார் அரசியல் பதட்டங்களுக்கு மத்தியில் அதன் பொருளாதாரப் பாதுகாப்பு கட்டமைப்பை வலுப்படுத்துகின்றன. ஆணை 834, செமிகண்டக்டர் மற்றும் AI போன்ற முக்கிய துறைகளைக் கண்காணிக்க அதிகாரிகளுக்கு அதிகாரம் அளிக்கிறது, அதே நேரத்தில் ஆணை 835, வெளிநாட்டுத் தடைகளை எதிர்கொள்ளும் சீனாவின் திறனை மேம்படுத்துகிறது. இந்த நடவடிக்கைகள், உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட இந்திய அரசின் 'Electronic Components Manufacturing Scheme (ECMS 2.0)' போன்ற திட்டங்களுக்கு தடையாக அமையலாம். ஏனெனில், இந்த திட்டங்கள் சீன தொழில்நுட்பம் மற்றும் உபகரணங்களை பெரிதும் நம்பியுள்ளன. இயந்திர ஏற்றுமதிக்கான நீண்ட கால ஒப்புதல் செயல்முறை, ஒருவேளை 45 நாட்கள் வரை ஆகலாம் என்பது, சீன தொழில்துறை கருவிகள் மீதான இந்தியாவின் சார்புநிலையை எடுத்துக்காட்டுகிறது.
