நிதி மோசடி தடுப்பில் DoT-ன் புதிய சாதனை
மத்திய அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா இன்று மாநிலங்களவையில் (Rajya Sabha) வெளியிட்ட தகவலின்படி, இந்திய அரசின் தொலைத்தொடர்பு துறை (DoT) அறிமுகப்படுத்தியுள்ள 'ஃபைனான்சியல் ஃபிராடு ரிஸ்க் இண்டிகேட்டர்' (FRI) அமைப்பு, இதுவரை ₹1,400 கோடிக்கும் அதிகமான நிதி மோசடிகளை தடுத்துள்ளது.
இந்த அமைப்பு, மொபைல் எண்களை 'மீடியம்', 'ஹை', அல்லது 'வெரி ஹை' என மோசடி நிகழ்தகவின் அடிப்படையில் வகைப்படுத்துகிறது. இந்த வகைப்பாட்டின் அடிப்படையில், வங்கிகள், என்.பி.எஃப்.சி (NBFC) நிறுவனங்கள் மற்றும் யு.பி.ஐ (UPI) சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் உடனடியாக அதிரடி பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க முடிகிறது.
பொதுமக்களும், நிதி அமைப்புகளும் பாதுகாப்பு
இதன் மூலம், வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை செய்திகள் அனுப்புவது, பரிவர்த்தனைகளை தாமதப்படுத்துவது, அல்லது சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகளை முற்றிலுமாக நிராகரிப்பது போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இது பொதுமக்களையும், நாட்டின் நிதி அமைப்புகளையும் மோசடிகளில் இருந்து பாதுகாக்கிறது.
டிஜிட்டல் இன்டெலிஜென்ஸ் பிளாட்ஃபார்ம் (DIP) பங்கு
இந்த FRI, DoT-ன் டிஜிட்டல் இன்டெலிஜென்ஸ் பிளாட்ஃபார்ம் (DIP) கீழ் செயல்படுகிறது. இந்த பிளாட்ஃபார்ம் நாடு முழுவதும் உள்ள 1,200-க்கும் மேற்பட்ட காவல் துறையினர், மத்திய அமைப்புகள், சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையம், பேமெண்ட் ஆபரேட்டர்கள் மற்றும் டெலிகாம் சேவை வழங்குநர்கள் போன்றவர்களை இணைக்கிறது. இதன் மூலம் சந்தேகத்திற்கிடமான எண்கள் குறித்த தகவல்கள் பகிரப்பட்டு, விரைவான நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
AI மற்றும் புதிய தொழில்நுட்பங்கள்
மேலும், மோசடிகளை தடுக்க பல மேம்பட்ட கருவிகளும் இந்த DIP-ல் இணைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, ASTR AI கருவி மூலம் சந்தேகத்திற்கிடமான இணைப்புகள் கண்டறியப்பட்டு, 8.8 மில்லியன்-க்கும் அதிகமான மொபைல் எண்கள் சரிபார்ப்புக்குப் பிறகு அதிரடியாக துண்டிக்கப்பட்டுள்ளன. அதேபோல், 2024-ன் பிற்பகுதியில் அறிமுகப்படுத்தப்பட்ட 'இன்டர்நேஷனல் இன்மிங் ஸ்பூஃப்டு கால்ஸ் பிரிவென்ஷன் சிஸ்டம்' (International Incoming Spoofed Calls Prevention System), இந்திய எண்களைப் போல தோற்றமளிக்கும் வெளிநாட்டு அழைப்புகளை கிட்டத்தட்ட 99% குறைத்துள்ளது. ஒரு நாளைக்கு 13.5 மில்லியன் இதுபோன்ற அழைப்புகளை இந்த அமைப்பு தடுத்துள்ளது.