Imperial College மற்றும் Emlyon Business School நடத்திய புதிய ஆய்வு, அதிக வென்ச்சர் கேப்பிடல் (VC) நிதி பெறும் ஸ்டார்ட்அப்கள் மோசடிகளில் ஈடுபடும் அபாயம் அதிகம் உள்ளதாகக் கூறுகிறது. வளர்ச்சியில் அதிக அழுத்தம் மற்றும் போதிய கண்காணிப்பு இல்லாததால் நிறுவனர்கள் செயல்திறன் தரவுகளைத் திரித்துக் கூறுவதாக ஆய்வு சுட்டிக் காட்டுகிறது.
ஸ்டார்ட்அப்களில் மோசடி: ஒரு பகீர் ஆய்வு
Imperial College மற்றும் Emlyon Business School இணைந்து நடத்திய ஒரு புதிய ஆய்வு, வென்ச்சர் கேப்பிடல் (VC) நிதியுதவி பெறும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் நடக்கும் மோசடிகள் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது. 2000 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில் நடந்த சிவில் மற்றும் கிரிமினல் மோசடி வழக்குகளை ஆய்வு செய்ததில், சந்தையின் அதீத வளர்ச்சி மற்றும் முதலீட்டாளர்களின் போதிய கண்காணிப்பு இல்லாத சூழல்களில் செயல்படும் நிறுவனங்கள், ஏமாற்று வேலைகளில் ஈடுபடும் வாய்ப்பு அதிகம் இருப்பது தெரியவந்துள்ளது. குறிப்பாக, சந்தையில் மிக வேகமாக, கட்டுப்பாடு இல்லாமல் முதலீடுகளைப் பெற்ற ஸ்டார்ட்அப்களில், 19% வரை மோசடி நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.
மோசடியின் மூன்று படிநிலைகள் ('Fading')
ஆராய்ச்சியாளர்கள் 'ஃபேடிங்' (Fading) என்ற ஒரு செயல்முறையை வரையறுத்துள்ளனர். இதன் மூலம், நிறுவனர்கள் தங்கள் உண்மையான செயல்திறனுக்கும், முதலீட்டாளர்கள் எதிர்பார்க்கும் வளர்ச்சிக்கும் இடையே உள்ள இடைவெளியை நிரப்ப, ஏமாற்று வழிகளைக் கையாள்வதாகக் கூறப்படுகிறது. ஆரம்பகட்ட முதலீட்டு சந்திப்புகளின்போது, வெற்றிக் கதைகளை மிகைப்படுத்திக் கூறுவதில் இது தொடங்குகிறது. தொடர்ந்து, போலியான ஆவணங்கள், வருவாய் பதிவுகள், ஒப்பந்தங்கள் போன்றவற்றை உருவாக்கி, தங்கள் நிறுவனத்தின் மதிப்பைக் காட்டுவார்கள். இறுதியாக, முற்றிலும் போலியான தொழில்நுட்ப செயல்விளக்கங்கள் அல்லது தனிப்பட்ட செயல்பாட்டு உண்மைகளை உருவாக்கி பங்குதாரர்களை ஏமாற்றும் அளவுக்கு மோசடி அதிகரிக்கும்.
நிர்வாகக் குறைபாடுகள் மற்றும் பொறுப்புக்கூறல்
இந்த மோசடி அபாயங்களைக் குறைப்பதில் அல்லது பெருக்குவதில் கார்ப்பரேட் நிர்வாகத்தின் பங்கு முக்கியமானது. ஆய்வின்படி, நிறுவனர்களின் கட்டுப்பாட்டில் உள்ள குழுக்களைக் கொண்ட ஸ்டார்ட்அப்கள், முதலீட்டாளர்கள் அல்லது சுயாதீன உறுப்பினர்களுடன் கட்டுப்பாட்டைப் பகிர்ந்து கொள்ளும் நிறுவனங்களை விட இரண்டு மடங்கு அதிகமாக மோசடியில் ஈடுபடுகின்றன. பல வேகமாக வளரும் ஸ்டார்ட்அப்கள் நீண்ட காலத்திற்கு தனிப்பட்ட நிறுவனங்களாகவே (Private) இருப்பதால், பொது நிறுவனங்களுக்குத் தேவையான கடுமையான தணிக்கை மற்றும் ஒழுங்குமுறை ஆய்வுகளைத் தவிர்க்கின்றன. இதனால், உள் பிரச்சனைகள் முதலீட்டாளர்களுக்கும் சந்தைக்கும் தெரியாமல் போகிறது.
முதலீட்டாளர் எதிர்பார்ப்புகளின் அழுத்தம்
பெரும்பாலும் நிறுவனர்களே மோசடிக்கு நேரடி காரணமாக இருந்தாலும், சில சமயங்களில் முதலீட்டாளர்களும் இதில் மறைமுகப் பங்கு வகிக்கலாம். யதார்த்தமற்ற வளர்ச்சி இலக்குகளை நிர்ணயிப்பதன் மூலம், நிறுவனர்கள் மீது தொடர் நிதி திரட்ட அழுத்தம் கொடுக்கப்படுகிறது. இதனால், தரவுகளைத் திரித்துக் கூற அவர்கள் நிர்பந்திக்கப்படலாம். மேலும், சில பிராந்தியங்களில் (குறிப்பாக சிலிக்கான் வேலி) ஸ்டார்ட்அப் கலாச்சாரத்தில், தோல்விகளை ஒரு கற்றல் அனுபவமாகக் கருதுவதாகவும், இதனால் முறைகேடு செய்த நிறுவனர்களும் மீண்டும் நிதி திரட்ட முடிவதாகவும் ஆய்வு குறிப்பிடுகிறது. ஒழுங்குமுறை அமைப்புகள், குறிப்பிட்ட முதலீட்டு வரம்புகளைத் தாண்டும் ஸ்டார்ட்அப்களுக்கு வழக்கமான தணிக்கைகளைச் செயல்படுத்த வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைக்கின்றனர். முதலீட்டாளர்கள், வளர்ச்சி கணிப்புகளை மட்டும் நம்பாமல், குழு அமைப்பு மற்றும் வருவாய், தொழில்நுட்ப உரிமைகோரல்களைச் சரிபார்ப்பதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது.
