2026-ம் ஆண்டுக்கான புதிய ஸ்டார்ட்அப் மற்றும் இன்குபேஷன் பாலிசியை (Startup Policy) உருவாக்க டெல்லி அரசு முனைப்பு காட்டி வருகிறது. பெங்களூரு, ஹைதராபாத் நகரங்களுக்கு போட்டியாக டெல்லியை மாற்ற, முன்னணி தொழில் அதிபர்களுடன் அரசு இன்று முக்கிய ஆலோசனை நடத்தி வருகிறது.
டெல்லியில் உள்ள 'The Lalit' ஹோட்டலில் இன்று ஒரு உயர் மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. டெல்லி முதல்வர் ரேகா குப்தா தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில், 2026 ஸ்டார்ட்அப் கொள்கைக்கான வரைபடம் இறுதி செய்யப்பட உள்ளது. 'Viksit Bharat 2047' தொலைநோக்கு திட்டத்தின் கீழ், ஸ்டார்ட்அப்களுக்கு உள்ள தடைகளை நீக்குவதே இதன் முக்கிய நோக்கம்.
ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற முக்கிய பிரபலங்கள்:
இந்தியாவின் முன்னணி தொழில்முனைவோர்கள் இதில் கலந்து கொண்டுள்ளனர்:
- Info Edge நிறுவனர் - சஞ்சீவ் பிக் சந்தானி
- Snapdeal இணை நிறுவனர் - குணால் பால்
- boAt நிறுவனர் - அமன் குப்தா
- அனன்யா பிர்லா
டெல்லியின் வியூகம் என்ன?
பெங்களூரு மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்கள் ஏற்கனவே ஸ்டார்ட்அப் உலகில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. அந்த நகரங்களுக்கு ஈடுகொடுக்க, டெல்லி அரசு வெறும் வரிச் சலுகைகளை மட்டும் வழங்காமல், அலுவலக இட வசதி, எளிமையான அரசு அனுமதிகள் மற்றும் உள்ளூர் நிதி ஆதாரங்களை (Localized Funding) மேம்படுத்த திட்டமிட்டுள்ளது.
முந்தைய ஆண்டுகளில் பல மாநிலங்களில் அறிவிக்கப்பட்ட ஸ்டார்ட்அப் பாலிசிகள், அதிகாரத்துவ தாமதங்களால் (Bureaucratic delays) சரியாக செயல்படுத்தப்படவில்லை. ஆனால், இந்த முறை அரசு நேரடி கருத்துகளைப் பெறுவதால், கொள்கைக்கும் செயலுக்கும் இடையே பெரிய இடைவெளி இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த கட்டமாக, இந்த பாலிசியின் இறுதி வரைவு எப்போது வெளியாகும் மற்றும் அது எப்போது அமலுக்கு வரும் என்பதே ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
