பங்குச் சந்தைகள் (Stock Exchanges), கிளியரிங் கார்ப்பரேஷன்கள் மற்றும் டெபாசிட்டரிகளில் இயக்குநர்களை நியமிக்கும் விதிகளில் SEBI முக்கிய மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளது. தகுதியான நிபுணர்களை ஈர்க்கும் வகையில் இந்த தளர்வுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்தியப் பங்குச் சந்தை கட்டுப்பாட்டு வாரியமான SEBI, சந்தை உள்கட்டமைப்பு நிறுவனங்களின் (Market Infrastructure Institutions - MIIs) நிர்வாகக் கட்டமைப்பை மேம்படுத்த புதிய ஆலோசனைகளை வெளியிட்டுள்ளது. தற்போதுள்ள கடுமையான விதிகள், பெரிய நிதி நிறுவனங்களில் பணிபுரியும் தகுதியான நபர்களை இயக்குநர்களாக நியமிப்பதில் சிக்கலை ஏற்படுத்துவதாகக் கருதி, இந்த மாற்றங்கள் கொண்டுவரப்படுகின்றன.
இயக்குநர்கள் நியமனத்தில் என்ன மாற்றம்?
இனி வரும் காலங்களில், 'பரவலாகப் பங்குதாரர்களைக் கொண்ட' (Widely held) தனியார் நிறுவனங்களுக்கும் சில விலக்குகள் அளிக்கப்பட உள்ளன. அதாவது, பொதுத்துறை நிறுவனங்கள் தவிர, வேறு எந்த ஒரு தனிப்பட்ட பங்குதாரரும் 10%-க்கும் அதிகமான பங்குகளை வைத்திருக்கவில்லை என்றால், அத்தகைய நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் பங்குச் சந்தை இயக்குநர்களாகப் பொறுப்பேற்க முடியும். இது சந்தை சார்ந்த முடிவுகளை எடுக்கும் நிபுணர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் என்று SEBI நம்புகிறது.
4 முக்கிய பதவிகள் - புதிய கெடுபிடி
நிர்வாகச் செயல்பாடுகளில் எந்தவிதத் தடங்கலும் ஏற்படக்கூடாது என்பதற்காக, கீழே உள்ள 4 முக்கிய பதவிகளுக்குத் தரப்படுத்தப்பட்ட விதிகளை SEBI உருவாக்கியுள்ளது:
- Chief Technology Officer (CTO)
- Chief Information Security Officer (CISO)
- Compliance Officer
- Chief Risk Officer
இந்த பதவிகளில் காலியிடங்கள் ஏற்பட்டால், அவற்றை 3 மாதங்களுக்குள் நிரப்ப வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும், எந்தச் சூழலிலும் நிர்வாகத் தொய்வு ஏற்படக்கூடாது என்பதற்காக, ஒவ்வொரு துறைக்கும் துணையாக 'டெபுடி' (Deputy) அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய மாற்றங்கள் குறித்து முதலீட்டாளர்கள் மற்றும் பங்குதாரர்கள் தங்களது கருத்துக்களை செப்டம்பர் 30, 2026 வரை தெரிவிக்கலாம். அதன் பிறகே இந்த விதிமுறைகள் இறுதி செய்யப்படும்.
