ஆகஸ்ட் 3, 2026-ல் அறிமுகப்படுத்தப்பட்ட Closing Auction Session (CAS)-ல் நிலவும் சந்தை ஏற்ற இறக்கங்களைக் கட்டுப்படுத்த SEBI புதிய சீர்திருத்தங்களை முன்மொழிந்துள்ளது. செட்டில்மென்ட் விலை கணக்கீடு மற்றும் வர்த்தக நேரத்தில் மாற்றங்கள் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.
சந்தை முடிவடையும் கடைசி நிமிடங்களில் வர்த்தகம் எவ்வாறு நடைபெற வேண்டும் என்பதில் பெரிய மாற்றங்களைச் செய்ய செபி (SEBI) திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, ஆகஸ்ட் 3, 2026 அன்று அறிமுகப்படுத்தப்பட்ட 'Closing Auction Session' (CAS)-ல் தற்போது நிலவும் குறைந்த பணப்புழக்கம் (Liquidity) மற்றும் அதிகப்படியான விலை மாற்றங்களைச் சரிசெய்ய இந்த புதிய ஆலோசனைகள் வந்துள்ளன.
செட்டில்மென்ட் விலையில் மாற்றம்
டெரிவேட்டிவ் டிரேடர்களுக்கு மிக முக்கியமான விஷயம், எக்ஸ்பைரி நாட்களில் செட்டில்மென்ட் விலை எப்படி தீர்மானிக்கப்படுகிறது என்பதுதான். தற்போது கடைசி 30 நிமிடங்கள் நடைபெறும் வர்த்தகத்தின் VWAP அடிப்படையில் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இதற்கு பதிலாக, கடைசி 30 நிமிட வர்த்தகம் மற்றும் 10 நிமிட ஏல நேரத்தை உள்ளடக்கிய ஒரு 'பிளெண்டட்' (Blended) முறையை கொண்டு வர செபி யோசித்து வருகிறது.
ஆர்டர் கேன்சல் செய்வதில் கெடுபிடி
கடைசி நிமிடங்களில் விலையை செயற்கையாக மாற்ற ஆர்டர்களைப் போட்டுவிட்டு உடனடியாக கேன்சல் செய்யும் முறையைத் தடுக்க, செபி புதிய விதிகளைக் கொண்டுவருகிறது. குறிப்பாக, ரெஃபரன்ஸ் விலையில் இருந்து 1%-க்கும் மேல் விலையுள்ள ஆர்டர்களை லாக் (Lock) செய்யத் திட்டமிட்டுள்ளது. அதேபோல், முதலீட்டாளர்கள் குழப்பமடைவதைத் தவிர்க்க, இனி Closing Auction-ன் போது IIV (Indicative Index Values) காண்பிக்கப்படாது.
வர்த்தக நேரம் என்னவாகும்?
சந்தை நேரத்தை சீரமைக்க செபி இரண்டு விருப்பங்களை முன்வைத்துள்ளது:
- விருப்பம் 1: வர்த்தக நேரத்தை 3:30 PM வரை நீட்டித்து, அதன் பின் ஏலம் மற்றும் டெரிவேட்டிவ் விண்டோவை 3:45 PM வரை வைப்பது.
- விருப்பம் 2: தற்போதைய 3:15 PM கட்-ஆஃப் நேரத்தையே தொடர்வது.
இந்த மாற்றங்கள் குறித்த உங்கள் கருத்துகளை முதலீட்டாளர்கள் மற்றும் பங்குச் சந்தை நிபுணர்கள் அக்டோபர் 3, 2026-க்குள் சமர்ப்பிக்கலாம்.
