இந்தியாவின் அண்டை நாடுகளைச் சேர்ந்தவர்களை போர்டு ஆஃப் டைரக்டர்களாக நியமிக்கும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு, மத்திய கார்ப்பரேட் விவகார அமைச்சகம் (MCA) புதிய கெடுபிடிகளை அறிவித்துள்ளது.
இந்தியாவில் தொழில் தொடங்கும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு, மத்திய கார்ப்பரேட் விவகார அமைச்சகம் (MCA) புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. குறிப்பாக, இந்தியாவுடன் நில எல்லைகளைப் பகிர்ந்து கொள்ளும் நாடுகளைச் சேர்ந்தவர்களை (உதாரணமாக சீனா) இயக்குநர்களாக நியமிக்க விரும்பும் நிறுவனங்கள், இனி மத்திய உள்துறை அமைச்சகத்தின் e-Sahaj போர்டல் மூலம் முன்கூட்டியே பாதுகாப்பு அனுமதி பெற வேண்டும். இது டைரக்டர் ஐடென்டிஃபிகேஷன் நம்பர் (DIN) பெறுவதற்கு முன்பே கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல் நடைமுறையில் குழப்பம் வேண்டாம்
அரசு 'நேஷனல் சிங்கிள் விண்டோ சிஸ்டம்' மூலம் எளிதான தொழில் வாய்ப்புகளை வழங்கினாலும், அது குறிப்பிட்ட சில சட்டப்பூர்வ அனுமதிகளுக்கு மாற்றாகாது என்று அமைச்சகம் திட்டவட்டமாகக் கூறியுள்ளது. வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் தொடங்கிய 30 நாட்களுக்குள் Form FC-1 தாக்கல் செய்வது அவசியம்.
பெயர் வைப்பதில் கெடுபிடி
புதிய நிறுவனங்களுக்குப் பெயர் வைப்பதில் ரிஜிஸ்திரார் ஆஃப் கம்பெனிகள் (ROC) தற்போது கடுமையான விதிமுறைகளைப் பின்பற்றுகின்றனர். பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் தாய் நிறுவனத்தின் பெயரையே இந்தியாவிலும் வைக்க விரும்பினால், அந்தப் பெயர் ஏற்கனவே இந்தியாவில் உள்ள உள்நாட்டு நிறுவனங்களுடன் மோதினால், அந்த நிறுவனங்களிடம் NOC வாங்குவது கட்டாயம். உலகளாவிய டிரேட்மார்க் இருந்தாலும், இந்திய விதிமுறைகளுக்குக் கட்டுப்பட வேண்டும்.
CSR மற்றும் நிதி விதிகள்
வெளிநாட்டு நிறுவனங்களின் இந்தியக் கிளைகளும் CSR விதிகளிலிருந்து விலக்கு பெற முடியாது. ₹500 கோடி நிகர மதிப்பு (Net worth), ₹1,000 கோடி வருவாய் (Turnover) அல்லது ₹5 கோடி நிகர லாபம் (Net profit) ஈட்டும் நிறுவனங்கள் கண்டிப்பாக CSR செலவுகளைச் செய்ய வேண்டும். அதேபோல், ஷேர் கேப்பிட்டல் மதிப்பை பூஜ்ஜியமாக வைத்திருக்க முடியாது என MCA தெளிவாக எச்சரித்துள்ளது.
முதலீட்டாளர்கள் கவனத்திற்கு
இந்தக் கட்டுப்பாடுகள் வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் புதிய முயற்சிகளைத் தொடங்க அதிக காலம் எடுக்கும் சூழலை உருவாக்கியுள்ளது. முறையான பாதுகாப்பு அனுமதிகளைப் பெறத் தவறினால், விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதுடன், சட்டரீதியான சிக்கல்களையும் சந்திக்க நேரிடும் என்பதால், நிறுவனங்கள் தங்கள் கம்ப்ளையன்ஸ் (Compliance) குழுவை இன்னும் வலுப்படுத்த வேண்டும்.
