இந்திய விண்வெளி தொழில்நுட்ப ஸ்டார்ட்-அப்பான GalaxEye, தனது OptoSAR தொழில்நுட்பத்திற்கு அமெரிக்க காப்புரிமை (Patent) பெற்றுள்ளது. இது ஆப்டிகல் மற்றும் ரேடார் சென்சார்களை ஒருங்கிணைக்கும் ஒரு புரட்சிகரமான தளமாகும்.
OptoSAR என்றால் என்ன?
பொதுவாக விண்வெளியில் செயல்படும் ஆப்டிகல் மற்றும் ரேடார் செயற்கைக்கோள்கள் தனித்தனியாகவே தரவுகளை சேகரிக்கும். இதனால் ஒரே இடத்தின் படங்களை வெவ்வேறு நேரங்களில் எடுக்கும்போது தரவு இடைவெளிகள் (Data Gaps) ஏற்படும். ஆனால், GalaxEye உருவாக்கியுள்ள OptoSAR தொழில்நுட்பம், ஆப்டிகல் மற்றும் மைக்ரோவேவ் சென்சார்களை ஒரே தளத்தில் ஒருங்கிணைக்கிறது. இதன் மூலம், எந்த காலநிலையிலும் பகல் அல்லது இரவில் துல்லியமான படங்களை எடுக்க முடியும். இந்த தொழில்நுட்பத்தின் சிறப்பை நிரூபிக்கும் வகையில், கடந்த 2026-ம் ஆண்டு மே மாதம் 'Mission Drishti' என்ற செயற்கைக்கோளை இந்நிறுவனம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.
முதலீட்டாளர்கள் கவனத்திற்கு...
முக்கியமாக, GalaxEye ஒரு தனியார் நிறுவனம் (Private Company) என்பதை முதலீட்டாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த பங்கு NSE அல்லது BSE-ல் பட்டியலிடப்படவில்லை. எனவே, சில்லறை முதலீட்டாளர்கள் இதில் நேரடியாக ஷேர்களை வாங்க முடியாது. தற்போது வரை தனியார் முதலீட்டு நிதி (Private Equity) மற்றும் வென்ச்சர் கேபிடல் மூலமே இந்நிறுவனம் நிதி திரட்டி வருகிறது.
அடுத்தகட்ட இலக்கு
அமெரிக்க காப்புரிமை பெற்றுள்ளதன் மூலம், சர்வதேச சந்தையில் கால்பதிக்க GalaxEye-க்கு பெரிய பலம் கிடைத்துள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் சுமார் 30 செயற்கைக்கோள்களை விண்ணில் நிலைநிறுத்த இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இவை பாதுகாப்புத்துறை, விவசாயம், காப்பீடு மற்றும் கடல்சார் உளவுத்துறை எனப் பல துறைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், விண்வெளித் துறை என்பது அதிக மூலதனம் தேவைப்படும் என்பதால், நிறுவனம் லாபத்தை ஈட்டும் வகையில் ஒப்பந்தங்களை எவ்வாறு கையாள்கிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
