பெங்களூரு, சென்னை மற்றும் ஹைதராபாத்தில் புதிய வீட்டுத் திட்டங்களில் 3BHK வீடுகளே **72%** இடத்தைப் பிடித்துள்ளன. லாபத்தை தக்கவைக்க பில்டர்கள் எடுக்கும் இந்த அதிரடி மாற்றத்தால், பட்ஜெட் வீடுகளுக்கான தட்டுப்பாடு அதிகரித்துள்ளது.
தென்னிந்தியாவின் முக்கிய நகரங்களில் ரியல் எஸ்டேட் சந்தை ஒரு பெரிய மாற்றத்தைச் சந்தித்து வருகிறது. மலிவு விலை மற்றும் சிறிய வகை வீடுகளைத் தவிர்த்து, பெரிய பரப்பளவு கொண்ட 3BHK வீடுகளை உருவாக்குவதில் பில்டர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். 2026-ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில், புதிய கட்டுமானங்களில் சுமார் 72% 3BHK அல்லது அதற்கும் அதிகமான பெரிய வீடுகளாகவே இருக்கின்றன.
லாபத்தை காக்க பில்டர்களின் வியூகம்
இந்த மாற்றத்திற்கு முக்கிய காரணம் கட்டுமான செலவுகள் அதிகரிப்புதான். நிலத்தின் விலை, ஸ்டீல் மற்றும் சிமெண்ட் போன்ற மூலப்பொருட்களின் விலை உயர்வால், சிறிய வீடுகளைக் கட்டுவது பில்டர்களுக்கு அதிக லாபத்தைத் தருவதில்லை. ஏனெனில், சமையலறை, குளியலறை என அடிப்படையான கட்டுமான செலவுகள் சிறிய அல்லது பெரிய வீடு என இரண்டிற்குமே கிட்டத்தட்ட சமமாகவே இருக்கின்றன. எனவே, அதிக விலைக்கு விற்கக்கூடிய பெரிய வீடுகளை உருவாக்குவதன் மூலம் தங்களின் லாப வரம்பை (Profit Margins) பில்டர்கள் பாதுகாத்து கொள்கின்றனர். உதாரணமாக, Shriram Properties நிறுவனம் தனது புதிய திட்டங்களில் 65% அளவிற்கு 3BHK வீடுகளை உள்ளடக்கியுள்ளது.
அதிகரித்துவரும் விலை இடைவெளி
இந்த மாற்றம் சாமானியர்களின் கனவை எட்டாக்கனியாக்கி வருகிறது. பெங்களூரு போன்ற நகரங்களில் கடந்த 2019 முதல் வீடுகளின் விலை 84% உயர்ந்துள்ள நிலையில், மக்களின் வருமானம் வெறும் 72% மட்டுமே உயர்ந்துள்ளது. ஹைதராபாத் சந்தையில் 1BHK மற்றும் 2BHK வீடுகளின் வரத்து வெறும் 5.2% ஆகக் குறைந்துவிட்டதால், முதல்முறை வீடு வாங்குவோர் பெரும் சிக்கலில் உள்ளனர்.
முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய ரிஸ்க்
இந்த பிரீமியம் ஹவுசிங் மாடல் குறுகிய காலத்திற்கு நல்ல லாபத்தைத் தந்தாலும், எதிர்காலத்தில் பல ஆபத்துகளைக் கொண்டுள்ளது. பெரிய வகை வீடுகள் சந்தையில் தேங்கினால், அது பில்டர்களின் நிதி நிலையைப் பாதிக்கும். குறிப்பாக ஐடி துறையில் வேலைவாய்ப்பு அல்லது ஊதிய உயர்வு குறைந்தால், இந்த உயர் ரக வீடுகளுக்கான தேவை சரிந்து, ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு பெரும் நெருக்கடியை உருவாக்கும். சிறிய பில்டர்கள் இத்தகைய சூழலில் சுதாரிப்பது கடினம் என்பதால், சந்தையின் விற்பனை வேகத்தை முதலீட்டாளர்கள் தொடர்ந்து கண்காணிப்பது அவசியம்.
