ரியல் எஸ்டேட் புரோஷர்களில் காட்டப்படும் வசதிகள் வெறும் விளம்பரம் அல்ல, அவை சட்டப்பூர்வமாக நிறைவேற்றப்பட வேண்டிய ஒப்பந்தங்கள் என உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. DLF நிறுவனத்தின் ‘The Primus’ திட்ட வழக்கில் இந்த தீர்ப்பு வந்துள்ளது, இது இனி வரும் காலங்களில் பில்டர்களின் பொறுப்புடைமையை பெரிய அளவில் மாற்றும்.
இந்திய உச்ச நீதிமன்றத்தின் இந்த வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு, ரியல் எஸ்டேட் துறையின் மார்க்கெட்டிங் முறையையே மாற்றி அமைக்கப் போகிறது. இனி புரோஷர்கள் அல்லது பிளான்களில் காட்டப்படும் வசதிகள் வெறும் கவர்ச்சிகரமான விளம்பரங்கள் கிடையாது, அவை வீடு வாங்குபவர்களிடம் செய்யப்பட்ட சட்டப்பூர்வ ஒப்பந்தங்கள். எனவே, புரோஷரில் என்ன வாக்குறுதி அளிக்கப்பட்டதோ, அதை பில்டர்கள் கண்டிப்பாக நிறைவேற்றியே ஆக வேண்டும்.
இந்த தீர்ப்பு குருகிராமில் உள்ள DLF நிறுவனத்தின் 'The Primus' திட்ட விவகாரத்தில் வெளிவந்துள்ளது. வீட்டின் தரைத்தள அமைப்பு (Site layout) தாங்கள் முதலீடு செய்யும்போது காட்டப்பட்ட திட்டத்திலிருந்து மாறுபட்டுள்ளதாக வாடிக்கையாளர்கள் புகார் அளித்ததே இந்த வழக்கிற்கு காரணம். குறிப்பாக, 24 மீட்டர் அகலமான சாலை வழங்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டு, பின்னர் அது குறைக்கப்பட்டு அந்த இடம் பார்க்கிங் அல்லது பூங்காவிற்கு மாற்றப்பட்டதே முக்கிய சர்ச்சையாக எழுந்தது.
விசாரணைக்கு உத்தரவு
நிஜ நிலவரத்திற்கும், புரோஷரில் காட்டப்பட்டதற்கும் இடையே பெரிய இடைவெளி இருப்பதை கவனித்த நீதிமன்றம், இது குறித்து விரிவான விசாரணை நடத்த Central Bureau of Investigation (CBI) அமைப்பிற்கு உத்தரவிட்டுள்ளது. விசாரணை நடுநிலையாக இருக்க வேண்டும் எனவும், கூடுதல் அதிகாரிகளை பணியில் அமர்த்தவும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
ரியல் எஸ்டேட் துறையில் என்ன மாற்றம்?
இதுவரை, "புரோஷர்கள் என்பது வெறும் மாதிரிதான், அதில் மாற்றங்கள் இருக்கலாம்" என பில்டர்கள் வாதாடி வந்தனர். ஆனால், இனி அத்தகைய வாதங்கள் எடுபடாது. இந்த தீர்ப்பால் பில்டர்களுக்கு இணக்கத்தன்மை செலவுகள் (Compliance costs) மற்றும் செயல்பாட்டு தாமதங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. எதிர்காலத்தில் திட்டங்களை அறிவிக்கும்போது நிறுவனங்கள் மிக கவனமாக இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், ஏற்கனவே விற்கப்பட்ட திட்டங்களில் ஏதேனும் முரண்பாடுகள் இருந்தால், பில்டர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதற்கும் இது வழிவகுக்கும்.
அடுத்த கட்ட விசாரணை அக்டோபர் 12 அன்று நடைபெற உள்ளது. அன்று தாக்கல் செய்யப்படும் விசாரணை அறிக்கை, இந்த கட்டுப்பாடு குறிப்பிட்ட திட்டங்களுக்கு மட்டும் தானா அல்லது ஒட்டுமொத்த ரியல் எஸ்டேட் சந்தையிலும் பெரிய தணிக்கைக்கு (Audit) வழிவகுக்குமா என்பதை தெளிவுபடுத்தும்.
