அரசுக்கு அவசர கோரிக்கை வைக்கும் டெவலப்பர்கள்
இந்திய ரியல் எஸ்டேட் துறை தற்போது கடுமையான நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. இந்தியாவின் முன்னணி ரியல் எஸ்டேட் அமைப்பான கிரெடாய் (CREDAI), வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்திடம் (MoHUA) உடனடி உதவியை கோரியுள்ளது. மேற்கு ஆசியாவில் நிலவும் மோதல் காரணமாக, கட்டுமானப் பொருட்களின் விலை அதிகரிப்பு மற்றும் சப்ளை செயின் பிரச்சனைகள் அதிகரித்து வருவதாகவும், இது ஒட்டுமொத்த கட்டுமானத் துறையையும் பாதிப்பதாகவும் டெவலப்பர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
சப்ளை செயின் பாதிப்பு, செலவு உயர்வு
புவிசார் அரசியல் பதற்றங்கள், ஸ்டீல், சிமெண்ட், அலுமினியம் போன்ற முக்கிய கட்டுமானப் பொருட்களின் கிடைப்பதையும், விலையையும் கடுமையாக பாதித்துள்ளன. எரிபொருள் விலையேற்றம் காரணமாக லாஜிஸ்டிக்ஸ் செலவுகளும் அதிகரித்துள்ளன. குஜராத்தின் மோர்பி செராமிக் ஹப்பில் ஏற்பட்ட தற்காலிக தடங்கல்கள், டைல்ஸ் விலைகளையும் உயர்த்தியுள்ளது. இந்த காரணிகள் நாடு முழுவதும் ப்ராஜெக்டுகளுக்கு தேவையான பொருட்களை பெறுவதையும், கட்டுமான செலவுகளையும் பெரிதும் பாதிக்கின்றன.
தொழிலாளர் பற்றாக்குறையால் தேங்கும் பணிகள்
கட்டுமானப் பொருட்களின் செலவு உயர்வு ஒருபுறம் இருக்க, தேவையான தொழிலாளர்களை கண்டுபிடிப்பதும் பெரும் சவாலாக உள்ளது. பல நகரங்களில் தொழிலாளர் பற்றாக்குறை காரணமாக கட்டுமானப் பணிகள் மெதுவாகி வருகின்றன. சில பகுதிகளில் எல்பிஜி (LPG) பற்றாக்குறை காரணமாக தொழிலாளர்கள் நகர்ப்புறங்களில் இருந்து வெளியேறிவிட்டதாகவும், இதனால் ப்ராஜெக்ட் தளங்களில் ஆட்கள் பற்றாக்குறை நிலவுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், பிராந்திய பிரச்சனைகள் மற்றும் தேர்தல்கள் காரணமாக தொழிலாளர்களின் வருகை மேலும் பாதிக்கப்பட்டுள்ளது.
டெவலப்பர்களின் கோரிக்கைகள் என்ன?
இந்த எதிர்பாராத பிரச்சனைகளை சமாளிக்க, டெவலப்பர்கள் அரசு நிவாரணம் கோருகின்றனர். தங்கள் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட காரணங்களால் ஏற்படும் தாமதங்களை ஈடுகட்ட, தற்போது நடந்து வரும் ப்ராஜெக்டுகளுக்கு 'ஃபோர்ஸ் மேஜூர்' (Force Majeure) அந்தஸ்து வழங்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்துகின்றனர். மேலும், அனைத்து ப்ராஜெக்டுகளின் கட்டுமானப் பணிகளையும் முடிக்க, ரெரா (RERA) அமைப்புகள் மூலம் மூன்று முதல் ஆறு மாதங்கள் வரை கால நீட்டிப்பு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த நடவடிக்கைகள், ப்ராஜெக்ட்களை திறம்பட நிர்வகிக்கவும், அபராதங்களைத் தவிர்க்கவும், துறையின் தேவை தொடர்ந்து மீண்டு வரவும் உதவும் என டெவலப்பர்கள் நம்புகின்றனர்.