இந்தியாவின் முன்னணி 7 நகரங்களில் வீடுகளின் விலை **2021** முதல் **59%** வரை அதிகரித்துள்ளது. கட்டுமானச் செலவு **34%** மட்டுமே உயர்ந்துள்ள நிலையில், நிலத்தின் மதிப்பு உயர்வு மற்றும் சப்ளை செயின் பாதிப்புகளே இந்த அதிரடி ஏற்றத்திற்கு முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகின்றன.
இந்தியாவின் டாப் 7 நகரங்களில் வசிக்கும் மக்கள், வீடுகளின் விலை அதிகரிப்பால் கடும் நெருக்கடியைச் சந்தித்து வருகின்றனர். 2021 முதல் 2025 வரையிலான காலகட்டத்தில், ஒரு சதுர அடி வீட்டின் விலை சராசரியாக ₹5,826-லிருந்து ₹9,260 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம், கட்டுமானப் பொருட்களின் விலை மற்றும் கூலி உயர்வு 34% மட்டுமே அதிகரித்துள்ளது.
லாபத்தை தீர்மானிக்கும் நிலத்தின் மதிப்பு
இந்த 25% இடைவெளிக்கு முக்கிய காரணம் நிலத்தின் விலை உயர்வுதான். கடந்த 5 ஆண்டுகளில் நகர்ப்புறங்களில் நிலத்தின் மதிப்பு 50% முதல் 120% வரை எகிறியுள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பே குறைந்த விலையில் நிலங்களை வாங்கி வைத்திருக்கும் பெரிய நிறுவனங்களுக்கு இது லாபகரமாக அமைந்தாலும், புதிதாகத் தொழில் தொடங்கும் நிறுவனங்களுக்கு இது சவாலாக மாறியுள்ளது.
சப்ளை செயின் மற்றும் கட்டுமானச் சவால்கள்
மேற்கு ஆசியாவில் நிலவும் அரசியல் பதற்றம் காரணமாக விநியோகச் சங்கிலியில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. இது கட்டுமானச் செலவை மேலும் 8% முதல் 10% வரை உயர்த்தியுள்ளது. குறிப்பாக ஸ்டீல் (TMT Bars) விலை 20% வரையிலும், போக்குவரத்து மற்றும் எரிபொருள் செலவு 15% முதல் 20% வரையிலும் உயர்ந்துள்ளது. இந்த விலைவாசி உயர்வு, கட்டுமானத்தின் அடிப்படை கட்டமைப்பை விட எலக்ட்ரிக்கல் மற்றும் பிளம்பிங் போன்ற கூடுதல் வேலைகளைப் பெரிதும் பாதித்துள்ளது.
முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டியது என்ன?
பழைய திட்டங்களில் வீடுகளை முன்பதிவு செய்த வாடிக்கையாளர்கள் தற்போதைய விலை உயர்வில் இருந்து தப்பித்தாலும், பில்டர்களின் லாப வரம்பு (Profit Margin) பெருமளவு சுருங்கியுள்ளது. புதிதாகத் தொடங்கப்படும் திட்டங்களில் பில்டர்கள் விலையை உயர்த்தினாலும், சாமானிய மக்களின் வாங்கும் திறன் கேள்விக்குறியாகியுள்ளது. மேலும், 2026-க்குள் சுமார் 5.4 லட்சம் வீடுகளைக் கட்டி முடிப்பதில் தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளதால், இது டெவலப்பர்களுக்கு கூடுதல் நிதி நெருக்கடியை உருவாக்கலாம்.
குறைந்த கடன் மற்றும் வலுவான பணப்புழக்கம் (Cash Flow) கொண்ட ரியல் எஸ்டேட் நிறுவனங்களே இந்த சவாலான சூழலை எதிர்கொள்ளத் தகுதியுடையதாக இருக்கும் என சந்தை நிபுணர்கள் கருதுகின்றனர்.
