வரிச் சட்டத்தில் தெளிவின்மைக்கு தீர்வு
புதிய வருமான வரிச் சட்டம் 2025 ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வந்தபோது, வீடு கட்டும் காலக்கட்டத்தில் செலுத்தப்படும் கடன் வட்டிக்கான வரி விலக்கு குறித்து சில குழப்பங்கள் எழுந்தன. இந்த சந்தேகங்களுக்கு தீர்வு காணும் விதமாக, Budget 2026-ல் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. பழைய வருமான வரிச் சட்டம் 1961-ல் இருந்ததைப் போலவே, வீடு கட்டி முடிக்கும் முன்பே செலுத்தப்படும் இந்த 'முந்தைய கால வட்டி' (Prior Period Interest) மீதான வரி விலக்கு தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய வரி விலக்கு முறை
தற்போதைய விதிகளின்படி, வீடு கட்டி முடிக்கும் முன்போ அல்லது வாங்கும் முன்போ நீங்கள் செலுத்தும் கடன் வட்டிக்கு வரி விலக்கு கோரலாம். இந்த விலக்கு, வீடு கைக்கு வந்த பிறகு அல்லது கட்டி முடித்த நிதி ஆண்டிலிருந்து 5 சமமான வருடாந்திர தவணைகளில் பிரித்து வழங்கப்படும். சொந்தமாக வசிக்கும் வீடுகளுக்கு (Self-Occupied Property) ஆண்டுக்கு அதிகபட்சமாக ₹2 லட்சம் வரை விலக்கு உண்டு. வாடகைக்கு விடும் வீடுகளுக்கு (Let-out Property) இந்த வரம்பு கிடையாது. முக்கிய நகரங்களில் கட்டிவரும் வீடுகளை முன்பதிவு செய்த பல குடும்பங்களுக்கு இது ஒரு ஆறுதலான செய்தி.
நிபுணர்களின் கருத்துக்கள் மற்றும் வரம்புகள்
இந்த அறிவிப்பு வரி விதிப்பில் உள்ள குழப்பங்களைத் தீர்த்தாலும், இது எந்தப் புதிய அல்லது கூடுதல் வரிச் சலுகைகளையும் வழங்கவில்லை என நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். மணோகர் சௌத்ரி அண்ட் அசோசியேட்ஸ் நிறுவனத்தின் பார்ட்னர் அமீத் படேல் கூறுகையில், 'இது ஏற்கனவே உள்ள நடைமுறையை அப்படியே தொடர அனுமதிக்கிறது, புதிய நன்மைகளைத் தரவில்லை' என்கிறார். மற்றொரு சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட் ஹினேஷ் தோஷி, 'முக்கியமான பிரச்னையான தாமதமான வரிப் பலன் அப்படியேதான் உள்ளது. வாங்குபவர்கள் பல வருடங்கள் வட்டி செலுத்தினாலும், வரி விலக்கு கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது. இது மட்டுமின்றி, திட்டங்கள் தாமதமாகலாம் அல்லது நிறைவடையாமல் போகலாம். அப்படி நடந்தால், வரி செலுத்துவோர் தங்கள் வரிப் பலன்களையே இழக்கும் அபாயமும் உள்ளது' என்றும் தெரிவித்துள்ளார்.