டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் கட்டண மாற்றம் ஏற்பட்டாலும் அதன் வளர்ச்சி குறையாது என ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் SC Murmu விளக்கம் அளித்துள்ளார். மேலும், நிறுவனங்களில் AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் போது, ஏற்படும் அனைத்து பாதிப்புகளுக்கும் நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு (Board) தான் முழு பொறுப்பு என்று அதிரடியாக அறிவித்துள்ளார்.
மும்பையில் நடந்த நிதித்துறை மாநாட்டில் பேசிய ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் SC Murmu, டிஜிட்டல் பேமெண்ட் கட்டணங்கள் மற்றும் நிறுவன நிர்வாகம் குறித்த முக்கிய விஷயங்களை தெளிவுபடுத்தினார். குறிப்பாக, வியாபாரிகளிடம் வசூலிக்கப்படும் MDR (Merchant Discount Rate) கட்டண மாற்றங்கள் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை பாதிக்காது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரொக்கமும் டிஜிட்டல் பரிவர்த்தனையும்
UPI பயன்பாடு மிக வேகமாக வளர்ந்து வரும் நிலையிலும், கையில் ரொக்கப் புழக்கம் அதிகமாக இருப்பதை கண்டு பல முதலீட்டாளர்கள் குழப்பமடைகின்றனர். இதற்கு விளக்கமளித்த RBI, மக்கள் தினசரி செலவுகளுக்கு டிஜிட்டல் முறையை நாடினாலும், சேமிப்பு அல்லது அவசர தேவைக்காக ரொக்கத்தை ஒரு பாதுகாப்பு சொத்தாகவே பார்க்கிறார்கள். எனவே, பணப் புழக்கம் அதிகரிப்பது டிஜிட்டல் வளர்ச்சியின் தோல்வி அல்ல என்பதை முதலீட்டாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
AI பயன்பாடு: பொறுப்பு யார் வசம்?
நிறுவனங்களில் செயற்கை நுண்ணறிவு (AI) பயன்படுத்துவதை ரிசர்வ் வங்கி ஒரு முக்கிய எச்சரிக்கையாக பார்க்கிறது. மென்பொருள்கள் அல்லது அல்காரிதம்கள் தவறான முடிவுகளை எடுத்தால், அதற்கு ஏஐ-யை காரணம் காட்டி தப்பிக்க முடியாது. எந்தவொரு நிதி இழப்பு அல்லது சட்ட விதிகள் மீறப்பட்டாலும், அந்த நிறுவனத்தின் போர்டு ஆஃப் டைரக்டர்ஸ் (Board of Directors) தான் முழு பொறுப்பு ஏற்க வேண்டும். இதனால், நிதி நிறுவனங்கள் இனி AI பயன்பாட்டிற்கு அதிக பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப கண்காணிப்பை கட்டாயம் மேற்கொள்ள வேண்டியிருக்கும்.
புதிய பாதுகாப்பு திட்டம்
நிதி மோசடிகளைத் தடுக்க, ரிசர்வ் வங்கி 'Digital Payments Intelligence Platform' என்ற புதிய கட்டமைப்பை உருவாக்கி வருகிறது. இது போலியான கணக்குகளை (Mule Accounts) கண்டறிந்து, நெட்வொர்க் அளவில் பாதுகாப்பை பலப்படுத்தும். அதேபோல், வங்கி மற்றும் நிதி நிறுவனங்களை 11 பிரிவுகளாக வகைப்படுத்தி, விதிமுறைகளை எளிமையாக்க RBI நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் மூலம் நிர்வாக சிக்கல்கள் குறைந்து, நிறுவனங்கள் சிறப்பாகச் செயல்பட உதவும்.
