இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வங்கி மற்றும் பேமெண்ட் நிறுவனங்களுக்கு அதிநவீன 'Quantum-secure' தொழில்நுட்பத்திற்கு மாற உத்தரவிட்டுள்ளது. அத்துடன், AI ஏஜெண்டுகளின் தவறுகளுக்கு அந்தந்த நிறுவனங்களே முழு பொறுப்பு என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
இந்திய நிதித்துறையை சைபர் தாக்குதல்களில் இருந்து பாதுகாக்க RBI அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது. வரும் காலங்களில் குவாண்டம் கம்ப்யூட்டிங் தொழில்நுட்பம் மூலம் தரவுகள் திருடப்படுவதைத் தடுக்க, வங்கிகள் மற்றும் பேமெண்ட் ஆபரேட்டர்கள் தங்களது கட்டமைப்பை 'Quantum-secure' முறைக்கு மாற்ற வேண்டும் என RBI உத்தரவிட்டுள்ளது. இதற்காக 'Q-SAFE' (Quantum Secure and Adaptive Financial Ecosystem) என்ற சிறப்பு நிபுணர் குழுவையும் உருவாக்கியுள்ளது.
'Harvest Now, Decrypt Later' அபாயம்
தற்போது திருடப்படும் தரவுகளை எதிர்காலத்தில் குவாண்டம் தொழில்நுட்பம் மூலம் எளிதாக ஹேக் செய்ய முடியும். இந்த 'Harvest now, decrypt later' ஆபத்தைத் தவிர்க்கவே, இப்போதே இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை RBI கட்டாயமாக்கியுள்ளது.
AI-க்கு முழு பொறுப்பு
செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் வங்கிகள் முடிவுகளை எடுக்கும்போது, அதில் ஏற்படும் எந்தவொரு தவறிற்கும் அல்லது நஷ்டத்திற்கும் வங்கி நிர்வாகமே பொறுப்பு என்று RBI தெரிவித்துள்ளது. அல்காரிதம்களைக் காட்டி நழுவ முடியாது; நிர்வாகம் AI மாடல்களை முழுமையாகக் கண்காணித்து நிர்வகிக்க வேண்டும்.
முதலீட்டாளர்களுக்கு என்ன பாதிப்பு?
இந்த மாற்றங்களால் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் தொழில்நுட்ப முதலீடு (Tech spending) கணிசமாக அதிகரிக்கும். இதனால் நிறுவனங்களின் செயல்பாட்டு லாபம் (Operating margins) குறைய வாய்ப்புள்ளது. டிஜிட்டல் கட்டமைப்பில் வலுவாக இருக்கும் நிறுவனங்கள் இந்த மாற்றங்களை எளிதில் எதிர்கொள்ளும், ஆனால் சிறிய நிதி நிறுவனங்களுக்கு இது பெரிய சுமையாக அமையலாம்.
