Employees’ Provident Fund Organisation (EPFO) ஊழியர்களைச் சேர்ப்பதற்கான புதிய சிறப்பு பிரச்சாரத்தை (Employees’ Enrolment Campaign 2026) தொடங்கியுள்ளது. ஏப்ரல் 2009 முதல் மார்ச் 2026 வரை பணியில் சேர்ந்த ஊழியர்களை, அபராதமின்றி பி.எஃப் கணக்கில் சேர்க்க அக்டோபர் 31, 2026 வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
அபராதத்தில் சலுகை
இந்தத் திட்டத்தின் முக்கிய அம்சம் என்னவென்றால், நிறுவனங்களுக்குச் செலவைக் குறைக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் ஊழியர்களைச் சேர்க்கத் தவறிய நிறுவனங்கள், அந்த ஊழியர்களின் பங்கை (Employee’s share) கட்ட வேண்டிய அவசியம் இல்லை. நிறுவனங்கள் தங்கள் பங்களிப்பை (Employer’s share) மட்டும் செலுத்தினால் போதும். இதற்காக வெறும் ₹100 பெயரளவு அபராதமாகச் செலுத்தினால் போதுமானது. ஆனால், ஏற்கனவே ஊழியர்களின் சம்பளத்தில் பி.எஃப் பிடித்தம் செய்யப்பட்டு, அதை பி.எஃப் அலுவலகத்தில் செலுத்தாமல் இருந்தால், இந்தச் சலுகை பொருந்தாது.
செயல்முறை எப்படி?
நிறுவனங்கள் தங்களது அதிகாரப்பூர்வ 'EPFO Employer Portal' மூலம் பதிவு செய்ய வேண்டும். இதில் முக அங்கீகார (Face Authentication) தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் ஊழியர்களுக்கு எளிதாக UAN எண் வழங்கப்பட்டு, அவர்களது ஓய்வூதியம் மற்றும் பி.எஃப் பலன்கள் உறுதி செய்யப்படும்.
VISHWAS 2026-க்கும் இதற்கும் உள்ள வித்தியாசம்
பல நிறுவனங்கள் இந்தத் திட்டத்தை 'VISHWAS 2026' திட்டத்துடன் குழப்பிக் கொள்கின்றன. EEC 2026 என்பது இதுவரை பி.எஃப் கணக்கில் சேராத ஊழியர்களைப் புதிதாகச் சேர்ப்பதற்கானது. VISHWAS 2026 என்பது ஏற்கனவே நிலுவையில் உள்ள பி.எஃப் தொகையைத் தாமதமாகச் செலுத்துவதால் ஏற்படும் அபராதங்களைச் சரிசெய்வதற்கானது. எனவே, உங்கள் தேவைக்கேற்ப சரியான திட்டத்தைத் தேர்வு செய்வது அவசியமாகும்.
எச்சரிக்கை
இந்தத் திட்டம் தற்போது பணியில் உள்ள ஊழியர்களுக்கு மட்டுமே பொருந்தும். அக்டோபர் 31, 2026 என்ற காலக்கெடுவிற்குப் பிறகு, நிறுவனங்கள் பழைய விதிமீறல்களுக்காகக் கடும் அபராதங்களையும் வட்டியையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். எனவே, அனைத்து நிறுவனங்களும் தங்கள் ஊதியப் பதிவேடுகளை (Payroll records) உடனடியாக தணிக்கை செய்வது நல்லது.
