தங்க பாண்டுகளுக்கு இவ்வளவு லாபமா? RBI தரும் சலுகை!
ரிசர்வ் வங்கி, தங்க பாண்டுகளுக்கான (SGBs) 2019-20 Series VI-க்கான பணமாக்கும் விலையை (redemption price) ஒரு யூனிட்டுக்கு ₹14,931 என நிர்ணயித்துள்ளது. இந்த பாண்டுகளை வைத்திருக்கும் முதலீட்டாளர்கள், ஏப்ரல் 30 முதல் தங்கள் முதலீடுகளை முன்கூட்டியே பணமாக்கத் தொடங்கலாம். 2019 அக்டோபரில் இந்த பாண்டுகள் வெளியிடப்பட்டதில் இருந்து தங்கத்தின் விலை கணிசமாக உயர்ந்துள்ளதே இதற்கு முக்கிய காரணம்.
இந்த பணமாக்கும் விலை, தகுதியான முதலீட்டாளர்களுக்கு சுமார் 295% நிகர லாபத்தை (absolute return) வழங்குகிறது. அதாவது, பாண்டுகள் வெளியிடப்பட்டபோது ஒரு கிராமுக்கு ₹3,785 என்ற விலையில் ₹1 லட்சம் முதலீடு செய்திருந்தால், அதன் இன்றைய மதிப்பு வட்டி உட்பட சுமார் ₹3.95 லட்சம் ஆகும்.
வழக்கமாக, தங்க பாண்டுகள் ஆண்டுக்கு 2.5% நிலையான வட்டி விகிதத்தை வழங்குகின்றன. இது ஆண்டுக்கு இருமுறை முதலீட்டாளர்களுக்கு வழங்கப்படும். இந்த வட்டியும் காலப்போக்கில் சேர்ந்து, மொத்த வருமானத்தை அதிகரிக்கும்.
புதிய வரி விதிமுறைகளால் என்ன மாற்றம்?
ஆனால், கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம் என்னவென்றால், ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வந்துள்ள புதிய வரிச் சட்டங்களின்படி, தங்க பாண்டுகளை முன்கூட்டியே பணமாக்கும்போது மூலதன ஆதாய வரி விதிக்கப்படும். முன்பு, இந்த வரி விலக்கு இருந்தது. பாண்டுகளின் முழு 8 வருட முதிர்வு காலத்தில் மட்டுமே வரி விலக்கு கிடைக்கும். இரண்டாம் சந்தையில் (secondary market) தங்க பாண்டுகளை வாங்குபவர்களுக்கும் இந்த புதிய வரி விதிகள் பொருந்தும்.
