NPS திட்டங்களில் முதலீடு செய்பவர்களுக்கு PFRDA முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இனி பழைய லாபத்தை மட்டும் பார்க்காமல், ஒவ்வொரு திட்டத்திலும் உள்ள ரிஸ்க் அளவை (A முதல் E வரை) பார்த்து முதலீட்டாளர்கள் தங்களின் போர்ட்ஃபோலியோவை தேர்வு செய்யலாம்.
தேசிய ஓய்வூதியத் திட்டமான (NPS) முதலீட்டாளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த, PFRDA புதிய வகைப்பாட்டு முறையை அறிமுகம் செய்துள்ளது. வருகிற ஆகஸ்ட் 28, 2026 முதல், அரசு சாரா NPS கணக்குகளுக்கு A முதல் E வரையிலான ரிஸ்க் லேபிள்கள் வழங்கப்படும்.
புதிய வகைப்பாட்டின் நோக்கம் என்ன?
இதுவரை முதலீட்டாளர்கள் பெரும்பாலும் கடந்த கால லாபத்தை (Historical Returns) மட்டுமே பார்த்து முதலீடு செய்து வந்தனர். ஆனால் இனி, பங்குகளில் (Equity) எவ்வளவு முதலீடு செய்யப்படுகிறது என்பதை பொறுத்து இந்த லேபிள்கள் பிரிக்கப்படும்.
- Category A: 80% முதல் 100% வரை ஈக்விட்டி முதலீடு (அதிக ரிஸ்க்).
- Category E: 0% முதல் 10% வரை ஈக்விட்டி முதலீடு (குறைந்த ரிஸ்க்).
இதன் மூலம், ஒவ்வொரு முதலீட்டாளரும் தங்களின் ரிஸ்க் எடுக்கும் திறனுக்கு ஏற்ப சரியான திட்டத்தைத் தேர்வு செய்ய முடியும்.
NPS Scheme Essentials
ஒவ்வொரு பென்ஷன் ஃபண்ட் மேனேஜரும் இனி 'NPS Scheme Essentials' என்ற ஆவணத்தைப் பராமரிக்க வேண்டும். இதில் முதலீட்டு நோக்கம், யாருக்கான திட்டம், பெஞ்ச்மார்க் மற்றும் கட்டண விவரங்கள் போன்றவை தெளிவாக இருக்கும். இது முதலீட்டாளர்கள் வெவ்வேறு ஃபண்டுகளை ஒப்பிட்டுப் பார்க்க உதவும்.
ஏற்கனவே முதலீடு செய்தவர்கள் என்ன செய்ய வேண்டும்?
தற்போது NPS வைத்திருப்பவர்கள் பதற்றமடையத் தேவையில்லை. கட்டாயமாக மாற்றங்கள் எதுவும் செய்ய வேண்டியதில்லை. இருப்பினும், இந்த புதிய லேபிள்களைப் பயன்படுத்தி, உங்களின் தற்போதைய முதலீடு உங்கள் ஓய்வுக்கால இலக்குகளுடன் ஒத்துப்போகிறதா என்பதை ஒருமுறை சரிபார்த்துக்கொள்வது நல்லது.
