NPS e-Shramik திட்டம், கிக் வொர்க்கர்கள் மற்றும் ஃப்ரீலான்ஸர்கள் மாதந்தோறும் கட்டாய கட்டணம் செலுத்தாமல், தங்களுக்கு வசதியான நேரத்தில் முதலீடு செய்து ஓய்வூதியத்தை உருவாக்க வழிவகை செய்கிறது.
வருமானத்திற்கு ஏற்ப முதலீடு
வழக்கமான பென்ஷன் திட்டங்களைப் போல மாதாமாதம் குறிப்பிட்ட தொகையைச் செலுத்த வேண்டிய கட்டாயம் இந்த திட்டத்தில் இல்லை. உங்கள் கையில் பணம் இருக்கும்போது, வெறும் ₹99-லிருந்து கூட முதலீட்டைத் தொடங்கலாம். இது வருமானம் சீரற்ற நிலையில் இருக்கும் ஃப்ரீலான்ஸர்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாகும். காம்பவுண்டிங் (Compounding) பலனைப் பெற சிறிய தொகையாக இருந்தாலும் தொடர்ந்து முதலீடு செய்வது அவசியம்.
சந்தை ரிஸ்க் கவனத்தில் கொள்க
இந்தத் திட்டம் பேங்க் பிக்சட் டெபாசிட் போல நிலையான லாபத்தைத் தராது. இது முழுக்க முழுக்க சந்தை நிலவரங்களுக்கு உட்பட்டது (Market-linked). பங்குச்சந்தை, கார்ப்பரேட் பாண்டுகள் மற்றும் அரசுப் பத்திரங்களில் முதலீடு செய்யப்படுவதால், சந்தையின் ஏற்ற இறக்கம் உங்கள் ஓய்வூதிய தொகையை பாதிக்கும். எனவே, உங்கள் வயதிற்கு ஏற்ப Auto-choice அல்லது Active investment முறையை சரியாகத் தேர்வு செய்வது அவசியம்.
பணம் எடுப்பதில் உள்ள கட்டுப்பாடுகள்
NPS-ன் Tier I அக்கவுண்டில் பணம் செலுத்துபவர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம், அதன் லாக்-இன் (Lock-in) காலம். குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் வரை பணத்தை எடுக்க முடியாது. அதன் பிறகு கூட, உங்களின் மொத்த பங்களிப்பில் 25%-ஐ மட்டுமே குறிப்பிட்ட காரணங்களுக்காக எடுக்க முடியும். எனவே, அவசரத் தேவைக்கான ஃபண்டாக (Emergency Fund) இதை நினைக்காமல், நீண்ட கால ஓய்வூதியத் திட்டமாக மட்டுமே பார்க்க வேண்டும்.
