சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில், ஒரு வீட்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், இது கொலை-தற்கொலை சம்பவமாக இருக்கலாம் என போலீசார் விசாரிக்கின்றனர். பிரேத பரிசோதனை அறிக்கைகள் முடிவுகள் வந்த பின்னரே உண்மை தெரியும்.
சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில், ஒரு வாடகை வீட்டில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஒரு குடும்பத்தின் ஐந்து பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வீட்டு உரிமையாளர் மற்றும் அக்கம்பக்கத்தினர் பலமுறை அழைத்தும் குடும்பத்தினர் கதவைத் திறக்காததாலும், வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதாலும் சந்தேகமடைந்தனர். பின்னர், போலீசார் வந்து பூட்டை உடைத்து உள்ளே சென்றபோது, வீட்டுக்குள் பயங்கர சம்பவம் அரங்கேறியுள்ளது தெரியவந்தது.
அங்கு, 50 வயதுடைய தந்தை சஜித் அலி, தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டார். அவரது மனைவி (45 வயது), 20 வயது மகன் மற்றும் இரு மகள்கள் (சிறுவர்கள்) ஆகியோர் தரையில் சடலமாக கிடந்துள்ளனர். இந்த குடும்பம் சுமார் எட்டு மாதங்களாக இங்கு வசித்து வந்துள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில், தந்தை தன் குடும்பத்திற்கு விஷம் கொடுத்துவிட்டு, பின்னர் தானும் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். எனினும், இதுகுறித்த உறுதியான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. சடலங்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதன் முடிவுகள் வந்த பிறகுதான் மரணத்திற்கான சரியான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர். அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடந்து வருகிறது.
