ஒடிசாவின் பாலாசூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட 5 ஒராங்குட்டான்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இது ஒரு சர்வதேச அளவிலான வனவிலங்கு கடத்தல் கும்பலின் வேலையாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. தற்போது சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கருப்பு நிற 'Thar' காரை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒடிசாவின் பிசித்ராபூர் பகுதியில் 5 குட்டி ஒராங்குட்டான்கள் கண்டெடுக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வகை குரங்குகள் பொதுவாக இந்தோனேசியா மற்றும் மலேசியாவின் மழைக்காடுகளில் மட்டுமே காணப்படும். இந்தியாவில் இவை கிடையாது என்பதால், இது சர்வதேச கடத்தல் கும்பலின் கைவரிசையாக இருக்கலாம் என அதிகாரிகள் கருதுகின்றனர்.
தீவிர விசாரணை
மாநிலத்தின் Special Task Force (STF), வனத்துறை மற்றும் மத்திய அரசின் Wildlife Crime Control Bureau (WCCB) ஆகியவை இணைந்து இந்த வழக்கை விசாரித்து வருகின்றன. இந்த கடத்தல் சம்பவத்தில் கடல்வழி பாதைகள் பயன்படுத்தப்படுகிறதா என்பதை அறிய Indian Coast Guard படையினரின் உதவியும் கோரப்பட்டுள்ளது.
முக்கிய துப்பு
சம்பவ இடத்திற்கு அருகில் திங்கட்கிழமை நள்ளிரவு சிசிடிவியில் பதிவான கருப்பு நிற Thar காரே தற்போது போலீசாரின் முக்கிய கவனத்தில் உள்ளது. அந்த வாகனம் எங்கு செல்கிறது மற்றும் அதன் உரிமையாளர் யார் என்பதை கண்டறிய விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் சோதனை சாவடிகளில் இருந்து தகவல்கள் திரட்டப்படுகின்றன.
விலங்குகளின் பாதுகாப்பு
மீட்கப்பட்ட 3 ஆண் மற்றும் 2 பெண் ஒராங்குட்டான்கள் (வயது 6 மாதம் முதல் 1 வருடம் வரை) தற்போது புவனேஸ்வரில் உள்ள Nandankanan Zoological Park-ல் தனிமைப்படுத்தப்பட்டு (Quarantine) கண்காணிக்கப்பட்டு வருகின்றன. கால்நடை மருத்துவர்கள் குழு அவற்றின் ஆரோக்கியத்தை உறுதி செய்ய சிறப்பு உணவுகளை வழங்கி வருகிறது. இந்த விலங்குகளை நிரந்தரமாக பூங்காவில் தங்க வைக்க Central Zoo Authority-ன் அனுமதியைப் பெற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
