UPI மூலம் உடனடி PF பணம்
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) தனது உறுப்பினர்களுக்கான சேவைகளில் ஒரு புரட்சிகரமான மாற்றத்தை கொண்டுவர உள்ளது. இனி PF தொகையை எடுப்பதற்கு UPI அடிப்படையிலான புதிய முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இது, நாடு முழுவதும் உள்ள 7 கோடிக்கும் அதிகமான உறுப்பினர்களுக்கான பணப் பரிமாற்ற நேரத்தை கணிசமாகக் குறைக்கும். மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, UPI வசதிக்கான சோதனைகள் வெற்றிகரமாக நடந்துள்ளதாகவும், இதன் மூலம் உறுப்பினர்கள் தங்கள் UPI ஐடி மற்றும் பின்னைப் பயன்படுத்தி, ஆதார் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக PF தொகையை மாற்ற முடியும் என்றும் உறுதிப்படுத்தியுள்ளார். இது வழக்கமான தாமதங்களைத் தவிர்க்க உதவும்.
மேம்படுத்தப்பட்ட டிஜிட்டல் சேவைகள்
UPI ஒருங்கிணைப்புடன், EPFO தனது டிஜிட்டல் சேவைகள் மற்றும் வாடிக்கையாளர் ஆதரவையும் பலப்படுத்துகிறது. உறுப்பினர்கள் இனி WhatsApp மூலம் 'Hello' என ஒரு மெசேஜ் அனுப்பி, தங்கள் PF இருப்பை சரிபார்க்கலாம், கடைசி ஐந்து பரிவர்த்தனைகளைப் பார்க்கலாம், மற்றும் க்ளைம் நிலையை கண்காணிக்கலாம். இந்தச் சேவை பல பிராந்திய மொழிகளிலும் கிடைக்கும், மேலும் ஆதார் அங்கீகாரம் அல்லது நேரடிப் பணப் பரிமாற்றங்களில் சிக்கல்களை எதிர்கொள்பவர்களுக்கு 24/7 உதவியை வழங்கும்.
Auto-Settlement வரம்பு உயர்வு
EPFO க்ளைம்களுக்கான Auto-Settlement வரம்பையும் ₹1 லட்சத்திலிருந்து ₹5 லட்சமாக உயர்த்தியுள்ளது. இதன் மூலம், நோய், கல்வி அல்லது வீட்டுவசதி போன்ற உடனடித் தேவைகளுக்கான தகுதியான க்ளைம்கள் தானாகவே மூன்று நாட்களுக்குள் செயலாக்கப்பட்டு பணம் செலுத்தப்படும். இது, நிர்வாகப் பணிகளைக் குறைக்கும். மேலும், நிலுவையில் உள்ள நுகர்வோர் வழக்குகள் ஏப்ரல் 2024 இல் 4,936 ஆக இருந்தது, மார்ச் 2026 இல் 2,646 ஆக குறைந்துள்ளதாகவும், பழைய வழக்குகளில் தீர்வு காண்பதன் மூலம் குறைகளைக் கையாள்வதில் அமைப்பு கவனம் செலுத்துகிறது.
