என்ன நடக்கிறது?
இந்திய பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபி (SEBI), தற்போது ஆக்டிவ் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களுக்கு இருக்கும் '50% போர்ட்ஃபோலியோ ஓவர்லேப்' விதியை, Passive Mutual Fund திட்டங்களுக்கும் விரிவுபடுத்த பரிசீலித்து வருகிறது. இதில் இண்டெக்ஸ் ஃபண்ட்ஸ் (Index Funds) மற்றும் எக்ஸ்சேஞ்ச் டிரேடட் ஃபண்ட்ஸ் (ETFs) ஆகியவை அடங்கும்.
தற்போதுள்ள விதியின்படி, ஆக்டிவ் திட்டங்கள் ஒன்றையொன்று ஒத்திருக்காமல் தனித்துவமான போர்ட்ஃபோலியோவை வைத்திருக்க வேண்டும். இந்த புதிய மாற்றத்தின் மூலம், ஒரே மாதிரியான முதலீட்டு முடிவுகளை தரும் பல Passive திட்டங்கள் சந்தையில் வருவதை செபி கட்டுப்படுத்த முயல்கிறது.
முதலீட்டாளர்களுக்கு இதன் முக்கியத்துவம் என்ன?
இந்திய மியூச்சுவல் ஃபண்ட் சந்தையில் Passive முதலீடுகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. குறிப்பாக சமீபத்திய ஆண்டுகளில், செக்டோரல் (Sectoral) மற்றும் தீமேட்டிக் (Thematic) வகைகளில் பல புதிய Passive திட்டங்களை சொத்து மேலாண்மை நிறுவனங்கள் (Asset Management Companies) வெளியிட்டுள்ளன.
முதலீட்டாளர்களைப் பொறுத்தவரை, சந்தையில் ஒரே குறியீட்டை (Index) அல்லது ஒரே துறையை டார்கெட் செய்யும் பல ETF-கள் அல்லது இண்டெக்ஸ் ஃபண்டுகள் இருப்பதால், எதைத் தேர்ந்தெடுப்பது என்பதில் குழப்பம் ஏற்படலாம்.
இந்த புதிய விதி, இதுபோன்ற தயாரிப்புச் சிக்கல்களை (Product Clutter) களைய உதவும். இது அமல்படுத்தப்பட்டால், ஏற்கனவே உள்ள திட்டங்களிலிருந்து உண்மையான வேறுபாடுகளைக் கொண்ட புதிய Passive ஃபண்டுகள் மட்டுமே அறிமுகப்படுத்தப்பட வேண்டும். இதனால், ஒரே மாதிரியான ஃபண்டுகளை தேர்ந்தெடுக்கும்போது முதலீட்டாளர்களுக்கு ஏற்படும் குழப்பம் தவிர்க்கப்படும்.
Passive முதலீட்டில் ஏற்பட்ட மாற்றம்
கடந்த ஆறு ஆண்டுகளில் Passive ஃபண்டுகளின் வளர்ச்சி அபரிமிதமாக இருந்துள்ளது. 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் வெறும் 8% ஆக இருந்த Passive திட்டங்களின் பங்கு, தற்போது சுமார் 40% ஆக உயர்ந்துள்ளது. இந்த வளர்ச்சியுடன் முதலீட்டாளர்களின் பணமும் அதிகரித்துள்ளது. தற்போது Passive திட்டங்களில் உள்ள சொத்துக்களின் மதிப்பு (Assets Under Management) சுமார் ₹15 லட்சம் கோடியை எட்டியுள்ளது.
குறைந்த செலவில், இண்டெக்ஸ்-ஐ டிராக்கிங் செய்யும் இந்த தயாரிப்புகள் முதலீட்டாளர்களுக்கு எளிதாக இருப்பதால் இந்த வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இருப்பினும், புதிய ஃபண்ட் ஆஃபர்கள் (NFOs) வெளியாகும் வேகம், முதலீட்டாளர்களின் தேவைக்கு அதிகமாக இருக்கிறதா என்று ஒழுங்குமுறை ஆணையம் கவலை கொண்டுள்ளது. குறிப்பாக, ஸ்மார்ட்-பீட்டா ஃபண்டுகள் (Smart-beta funds) மீது சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது. ஏனெனில், இந்த ஃபண்டுகள் குறிப்பிட்ட உத்திகளைப் பயன்படுத்தி பங்குகளைத் தேர்ந்தெடுப்பதால், சந்தையில் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றதாக இல்லாத சிக்கலான தயாரிப்புகள் நிரம்பி வழிவதை செபி தவிர்க்க விரும்புகிறது.
தயாரிப்பு தரத்தில் ஒழுங்குமுறை கவனம்
இது, மியூச்சுவல் ஃபண்ட் துறையில் தயாரிப்புகளின் எண்ணிக்கையை விட முதலீட்டாளர் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிப்பதை உறுதிசெய்யும் ஒரு பரந்த ஒழுங்குமுறை முயற்சியின் ஒரு பகுதியாகும். போர்ட்ஃபோலியோ ஓவர்லேப்பைக் கட்டுப்படுத்துவதன் மூலம், சொத்து மேலாண்மை நிறுவனங்கள் சந்தைப் பங்கை கைப்பற்றுவதற்காக ஒரே மாதிரியான ஃபண்டுகளை அறிமுகப்படுத்துவதை விட, தனித்துவமான மதிப்பு முன்மொழிவுகளில் (Unique Value Propositions) கவனம் செலுத்த செபி அழுத்தம் கொடுக்கிறது. இதற்கு முன்னர் ஆக்டிவ் செக்டோரல் ஃபண்டுகளுக்கும் இதேபோன்ற கட்டுப்பாடுகளை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
