மியூச்சுவல் ஃபண்ட் தரும் ரிட்டர்னுக்கும், உங்கள் வங்கிக் கணக்கில் சேரும் லாபத்திற்கும் ஏன் வித்தியாசம் வருகிறது? இந்த 'Behavior Gap' சிக்கலைத் தீர்க்கும் ரகசியங்கள் இதோ.
மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் காட்டும் ரிட்டர்னுக்கும், முதலீட்டாளர்களின் உண்மையான லாபத்திற்கும் இடையே பெரிய வித்தியாசம் இருப்பது பலருக்கும் தெரிவதில்லை. ஃபண்ட் மேனேஜரின் திறமையை விட, முதலீட்டாளர்களின் மனநிலைதான் இந்த 'Behavior Gap'-க்கு முக்கிய காரணம்.
மார்க்கெட்டை கணிக்க நினைப்பது தரும் நஷ்டம்
பல முதலீட்டாளர்கள் 'Recency Bias' எனப்படும் தவறான பழக்கத்தால் பாதிக்கப்படுகிறார்கள். அதாவது, ஏற்கனவே நல்ல வளர்ச்சியைத் தந்த துறைகளில், மார்க்கெட் உச்சத்தில் இருக்கும்போது பணத்தை முதலீடு செய்கிறார்கள். DSP அறிக்கையின்படி, 2007-2008 உள்கட்டமைப்பு துறை வளர்ச்சியின் போது, பல முதலீட்டாளர்கள் உச்சத்தில் நுழைந்தனர். அப்போது ஃபண்ட் 33.8% வருமானம் தந்தும், சராசரி முதலீட்டாளர்களுக்குக் கிடைத்தது வெறும் 6.2% மட்டுமே.
இதே நிலை இப்போதும் டெக்னாலஜி ஃபண்டுகளில் தொடர்கிறது. 17% வருமானம் தரும் ஃபண்டுகளில், சராசரி முதலீட்டாளர் 7% மட்டுமே ஈட்டுகிறார். ஏறும் போது வாங்குவதும், லேசாக இறங்கும் போது பதற்றத்தில் விற்பதுமே இதற்குக் காரணம்.
SIP இருந்தாலும் ஏன் பயம் வருகிறது?
SIP என்பது ஒழுக்கமான முதலீட்டு முறைதான். ஆனால், போர்ட்ஃபோலியோ மதிப்பு வளர வளர, ஒரு 10% இறக்கம் கூட பெரிய தொகையாகத் தெரியும். அந்த சமயத்தில் பதற்றமடைந்து SIP-ஐ நிறுத்துவது அல்லது யூனிட்களை விற்பது, காம்பவுண்டிங் (Compounding) பலனைத் தடுத்துவிடும்.
தீர்வு என்ன?
நிபுணர்கள் தரும் ஆலோசனைகளின்படி, பணத்தை 'Bucketing' செய்வது நல்லது:
- எமர்ஜென்சி ஃபண்ட்: கைவசம் ரொக்கமாக இருப்பது.
- குறுகிய கால இலக்கு: கடன் சார்ந்த திட்டங்கள் (Debt).
- நீண்ட கால இலக்கு: ஈக்விட்டி (Equity).
அவசரத் தேவைகளுக்குத் தனிப் பணம் ஒதுக்கிவிட்டால், மார்க்கெட் இறங்கும் போது பதற்றத்தில் முதலீட்டை விற்க வேண்டிய அவசியம் இருக்காது. 5 முதல் 10 ஆண்டுகள் வரை முதலீட்டைத் தொடர்ந்தால் மட்டுமே சந்தையின் இரைச்சலைத் தவிர்த்துவிட்டு உண்மையான பலனைப் பெற முடியும்.
