AVGC துறை விரிவாக்கம்
இந்தியாவின் வளர்ந்து வரும் Animation, Visual Effects, Gaming, and Comics (AVGC) துறைக்கு மத்திய பட்ஜெட் 2026-27 ஒரு பெரிய முக்கியத்துவத்தை அளிக்கிறது. 2030 ஆம் ஆண்டுக்குள் சுமார் 20 லட்சம் புதிய நிபுணர்கள் தேவைப்படுவார்கள் என அரசு எதிர்பார்க்கிறது. இந்த தேவையை சமாளிக்க, கல்வி மற்றும் பயிற்சி கட்டமைப்பை விரிவுபடுத்துவது அவசியம்.
இதற்காக, நிதி அமைச்சர், மும்பையில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் கிரியேட்டிவ் டெக்னாலஜிஸை (IICT) வலுப்படுத்தவும், நாடு முழுவதும் AVGC கண்டென்ட் கிரியேட்டர் லேப்ஸ்களை அமைக்கவும் திட்டமிட்டுள்ளார். இந்த லேப்ஸ்கள் 15,000 மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் 500 கல்லூரிகளில் அமைக்கப்படும். இதன் மூலம் அடுத்த தலைமுறை கிரியேட்டர்களை நேரடியாக உருவாக்கும் நோக்கம் கொண்டது.
எக்கனாமிக் சர்வேயின் பார்வையில்...
'ஆரஞ்சு எக்கனாமி' மீதான அரசின் கவனம், எக்கனாமிக் சர்வே 2025-26ன் பரிந்துரைகளுடன் ஒத்துப்போகிறது. கலை, மீடியா, பொழுதுபோக்கு மற்றும் அறிவுசார் சொத்துரிமை போன்ற கிரியேட்டிவிட்டி சார்ந்த துறைகளை 'ஆரஞ்சு எக்கனாமி' என சர்வே வரையறுக்கிறது. இவை வேலைவாய்ப்பு, நகர சேவைகள் மற்றும் சுற்றுலாவை மேம்படுத்தும் முக்கிய காரணிகளாக பார்க்கப்படுகின்றன.
இருப்பினும், போதுமான இடவசதி மற்றும் ரெகுலேட்டரி தடைகள் போன்ற சவால்களை கடக்கும் பட்சத்தில் மட்டுமே இத்துறை அதன் முழு திறனை எட்டும் என்றும் சர்வே குறிப்பிட்டிருந்தது.
டிசைன் மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள்
AVGC துறையைத் தாண்டி, கிழக்கு இந்தியாவில் ஒரு புதிய தேசிய வடிவமைப்பு நிறுவனத்தை (National Institute of Design - NID) நிறுவுவதன் மூலம் இந்தியாவின் வடிவமைப்பு திறன்களை வலுப்படுத்த பட்ஜெட் முக்கியத்துவம் அளிக்கிறது. வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களான ஆர்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் (AI) போன்றவை, குடிமக்களின் திறனை வளர்க்கவும், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவிக்கவும் மையமாக வைக்கப்பட்டுள்ளன.
AI மிஷன் மற்றும் தேசிய குவாண்டம் மிஷன் போன்ற முக்கிய தொழில்நுட்ப திட்டங்களுக்கு அரசு தனது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளது. இவை ஆரஞ்சு எக்கனாமி விரிவாக்கத்திற்கு பெரிதும் உதவும்.
அக்ரி-டெக் மற்றும் திறன்கள்
பரந்த பொருளாதார மேம்பாட்டிற்காக தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில், விவசாய உற்பத்தித்திறனை மேம்படுத்தும் நோக்கில், விவசாய வளங்கள் மற்றும் நடைமுறைகளை ஒருங்கிணைக்கும் ஒரு AI அடிப்படையிலான பன்மொழி தளமான 'பாரத்-விஸ்தார்' (Bharat-VISTAAR) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், வேலைவாய்ப்பு நிலப்பரப்பில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ற கொள்கை முடிவுகளை உறுதிசெய்யும் வகையில், AI மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களின் வேலைவாய்ப்பு மற்றும் திறன் மீதான தாக்கத்தை மதிப்பிடுவதற்கு ஒரு உயர்மட்ட குழு அமைக்கப்படும்.