ஆடம்பர சந்தையில் அசூர வளர்ச்சி, ஆனால்...
இந்தியாவின் ஆடம்பர சந்தை, பணக்கார வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால், 2028-க்குள் $12 பில்லியன் டாலரை எட்டும் என கணிக்கப்பட்டுள்ளது. வரும் 2025-ல் மட்டும் சந்தை 15% முதல் 20% வரை வளரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2022-ல் இருந்த 15 லட்சம் டாலர் மில்லியனர்கள், 2027-ல் 58% அதிகரித்து 24 லட்சத்தை தாண்டக்கூடும். அதேபோல், உச்ச பணக்காரர்களின் (Ultra-high-net-worth individuals) எண்ணிக்கையும் 2028-க்குள் 50% வரை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படிப்பட்ட அதீத தேவை இருந்தபோதிலும், இந்தியாவில் தரமான, பிரத்தியேகமாக Luxury பிராண்டுகளுக்காக வடிவமைக்கப்பட்ட ஷாப்பிங் இடங்கள் மிகக் குறைவாகவே உள்ளன. தற்போது, டெல்லி மற்றும் மும்பை போன்ற நகரங்களில் சுமார் 6 லட்சம் சதுர அடி மட்டுமே இந்த வகை இடங்கள் உள்ளதாக கூறப்படுகிறது.
உலக பிராண்டுகள் ஏன் இந்தியாவுக்கு வர தயங்குகின்றன?
சீனா போன்ற நாடுகளில் ஏராளமான Luxury ஷாப்பிங் இடங்கள் உள்ளன. ஆனால் இந்தியாவில், பணக்கார வாடிக்கையாளர்கள் பரவலாக இருப்பதால், சொகுசு பிராண்டுகள் தங்கள் தயாரிப்புகளை கொண்டு செல்வதற்கு போதுமான இடவசதி இல்லை. இதன் காரணமாக, Prada, Chanel போன்ற முன்னணி பிராண்டுகள் சீனாவில் பல கடைகளை வைத்திருந்தாலும், இந்தியாவில் சில கடைகளை மட்டுமே திறந்துள்ளன. இதுவே வெளிநாட்டு பிராண்டுகள் இந்தியாவில் கால்பதிக்க தயங்குவதற்கு முக்கியக் காரணம். மேலும், தற்போதுள்ள சில ஷாப்பிங் மால்களும், பிராண்டுகளின் தேவைகளான பெரிய முகப்பு பகுதி (Store Frontage), சிறந்த உள் கட்டமைப்பு வசதிகள் மற்றும் சரியான கடை அமைப்புகளை கொண்டிருக்கவில்லை.
வளர்ச்சிக்கு உந்துதல் கொடுக்கும் புதிய திட்டங்கள்...
இந்த இடைவெளியை குறைக்க, ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் சில நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. Bharti Real Estate நிறுவனம் Worldmark, Aerocity-ல் ஒரு பிரம்மாண்ட மாலை கட்டமைத்து வருகிறது. இதில் Luxury பிரிவு 2027-ல் திறக்கப்பட உள்ளது. Prestige Group நிறுவனம் 2028-2029-க்குள் 8 மில்லியன் சதுர அடி பரப்பளவில் புதிய மால் இடங்களை சேர்க்க திட்டமிட்டுள்ளது. இதில் மும்பையில் ஒரு பெரிய Luxury மால் அடங்கும். இருப்பினும், வேகமாக வளர்ந்து வரும் மக்களின் செல்வ வளத்திற்கு ஏற்ப, புதிய கட்டுமானங்கள் இன்னும் போதுமானதாக இல்லை.
சவால்களும், எதிர்காலமும்
இந்திய ஆடம்பர சந்தை எதிர்கொள்ளும் முக்கிய சவால்களில் ஒன்று, இறக்குமதி வரிகள் (25% வரை) ஆகும். இது பொருட்களின் விலையை அதிகரித்து, லாபத்தை பாதிக்கக்கூடும். மேலும், நகரங்களுக்கு வெளியே உள்கட்டமைப்பு வசதிகள் குறைவாக இருப்பது, திட்டங்களை செயல்படுத்துவதில் உள்ள சிக்கல்கள் மற்றும் பலவிதமான விதிமுறைகள் ஆகியவை ரியல் எஸ்டேட் மேம்பாட்டிற்கு தடையாக உள்ளன. சில டெவலப்பர்கள், வாடிக்கையாளர் தேவைகளை விட தங்களுடைய சொந்த திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுப்பதாகவும் கூறப்படுகிறது. தரமான Luxury மால்கள் பற்றாக்குறையால், பல பிராண்டுகள் தங்களுக்கு உகந்ததல்லாத இடங்களில் செயல்பட வேண்டியுள்ளது. Bulgari நிறுவனத்தின் CEO-வின் கருத்துப்படி, இந்திய சந்தை உலக அளவில் போட்டியிட 10 முதல் 15 Luxury மால்கள் தேவைப்படுகிறது. தற்போதுள்ள மால்கள் 95%-க்கும் மேல் நிரம்பி வழிகின்றன. 2028-ல் $12 பில்லியன் வருவாயை எட்டுவது என்பது, உயர்தர, அனுபவத்தை மையமாகக் கொண்ட ஷாப்பிங் சூழல்களை உருவாக்குவதைப் பொறுத்தே அமையும்.