அரசியலமைப்பு கடமை!
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 21-ன் கீழ் 'வாழ்வதற்கான உரிமை' என்பது, பாதுகாப்பான சாலைப் பயணத்தையும் உள்ளடக்கியது என உச்ச நீதிமன்றம் தெளிவாகக் கூறியுள்ளது. நீதிபதிகள் ஜே.கே. மகேஸ்வரி மற்றும் ஏ.எஸ். சந்தூர்ந்தர் அடங்கிய அமர்வு, தடுக்கக்கூடிய நெடுஞ்சாலை விபத்து மரணங்கள், குடிமக்களைப் பாதுகாக்கும் தங்கள் அரசியலமைப்பு கடமையை அரசு நிறைவேற்றத் தவறியதைக் காட்டுகிறது என்று குறிப்பிட்டது. இந்த உரிமை என்பது சட்டவிரோத மரணங்களில் இருந்து பாதுகாப்பு அளிப்பது மட்டுமல்லாமல், அனைவருக்கும் பாதுகாப்பான சாலைகளை உறுதிசெய்வதையும் உள்ளடக்கும் என நீதிமன்றம் விளக்கியுள்ளது.
'எந்தவொரு நிதி அல்லது நிர்வாகக் கட்டுப்பாடுகளும் பொதுப் பாதுகாப்பைப் புறக்கணிக்க ஒரு காரணமாக இருக்க முடியாது' என நீதிமன்றம் வலியுறுத்தியது. 34 பேர் உயிரிழந்த இரண்டு கொடூரமான விபத்துக்களைத் தொடர்ந்து, தாமாகவே முன்வந்து இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இந்த கடுமையான கருத்துக்களைத் தெரிவித்துள்ளது.
முக்கிய உத்தரவுகள் அமல்!
நெடுஞ்சாலைப் பாதுகாப்பை மேம்படுத்த, நீதிமன்றம் பல கட்டாய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. இதன்படி, தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள பாதைகளிலோ அல்லது சாலையோரங்களிலோ கனரக மற்றும் வர்த்தக வாகனங்கள், நியமிக்கப்பட்ட பகுதிகளைத் தவிர வேறு எங்கும் நிறுத்தக் கூடாது. சாலையோரக் கடைகள், உணவகங்கள் மற்றும் பிற ஆக்கிரமிப்புகள் அனைத்தையும் 60 நாட்களுக்குள் அகற்ற வேண்டும். மேலும், நெடுஞ்சாலை பாதுகாப்பு மண்டலங்களுக்குள், நெடுஞ்சாலை அதிகாரிகளின் முன் அனுமதியின்றி எந்த உரிமமும் வழங்கவோ அல்லது புதுப்பிக்கவோ முடியாது.
ஒவ்வொரு மாவட்டத்திலும், தேசிய நெடுஞ்சாலைகளுக்கு அருகில் 'மாவட்ட நெடுஞ்சாலைப் பாதுகாப்புப் படைகள்' அமைக்கப்படும். மாநில காவல்துறை மற்றும் போக்குவரத்துத் துறைகள், நெடுஞ்சாலைக் கண்காணிப்பு மற்றும் ரோந்துப் பணிகளுக்காக பிரத்யேக குழுக்களை நியமிக்க வேண்டும். விபத்துக்கள் அதிகமாக நடக்கும் பகுதிகள் (Accident Blackspots) 45 நாட்களுக்குள் கண்டறியப்பட்டு வெளியிடப்பட வேண்டும். இந்தப் பகுதிகளில் மேம்பட்ட விளக்குகள் மற்றும் சாலை குறியீடுகள் நிறுவப்படும். அவசர ஊர்திகள், மீட்பு வாகனங்கள் (Recovery Cranes) போன்ற வாகனங்கள் அதிகபட்சம் 75 கிலோமீட்டர் இடைவெளியில் நிறுத்தப்படும்.
உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப மேம்பாடு!
மேலும், போதுமான லாரி நிறுத்துமிட வசதிகள் (Truck Lay-bye Facilities) மற்றும் சாலையோர வசதிகள், ஓய்வறைகள், கழிவறைகள், உணவு சேவைகள், முதலுதவி நிலையங்கள் போன்றவையும் குறிப்பிட்ட இடைவெளியில் உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. கண்காணிப்பு கேமராக்கள், வேகக் கட்டுப்பாட்டுக் கருவிகள், அவசர அழைப்புப் பெட்டிகள் போன்ற தொழில்நுட்ப அமைப்புகளும் நெடுஞ்சாலைகளில் செயல்படுத்தப்படும். ஆக்கிரமிப்புகள் போன்ற பிரச்சனைகளைப் புகாரளிக்க, கட்டணமில்லா உதவி எண்கள் மற்றும் டிஜிட்டல் புகார் முறைகள் ஏற்படுத்தப்படும்.
சாலைப் போக்குவரத்தைச் சீரமைக்க, தேசிய நெடுஞ்சாலைகள் அமைச்சகம் மாநிலங்களுக்கு இடையே ஒருங்கிணைப்புக்கான ஒரு முறையை உருவாக்கும். பொறுப்பான அனைத்து அமைப்புகளும், தங்கள் இணக்க அறிக்கைகளை 75 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இந்தியாவில் உள்ள மொத்த சாலைப் பாதைகளில் 2% மட்டுமே தேசிய நெடுஞ்சாலைகள் என்றாலும், அங்கு 30% சாலை விபத்து மரணங்கள் நிகழ்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சீர்திருத்தங்களின் அவசியத்தை இது காட்டுகிறது.