அரசு ஊழியர்கள் தங்களின் பென்ஷன் பலன்களை, சட்டப்பூர்வ மனைவியை தவிர்த்துவிட்டு வேறு வாரிசுகளுக்கு நாமினேஷன் (Nomination) மூலம் மாற்ற முடியாது என்று குஜராத் உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
பென்ஷன் என்பது ஒரு அரசு ஊழியரின் தனிப்பட்ட சொத்து அல்ல, அது ஒரு சமூக நலத் திட்டம் என்பதை குஜராத் உயர்நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. ஒரு ஊழியர் தான் விரும்பும் நபரை வாரிசாக நியமித்து (Nomination), சட்டப்பூர்வமான மனைவியை பென்ஷன் பலன்களிலிருந்து நீக்க முடியாது என்று நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
தீர்ப்பின் பின்னணி
அரசு ஊழியர் ஒருவர் தனது மனைவிக்குத் தெரியாமல், பென்ஷன் பலன்களைத் தனது குழந்தைகளுக்கு மட்டுமே வழங்க வேண்டும் என பிரமாணப் பத்திரம் மற்றும் நாமினேஷன் படிவங்களைச் சமர்ப்பித்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், பென்ஷன் விதிகள் மிகக் கடுமையான சட்டக் கட்டமைப்பைக் கொண்டவை என்றும், ஊழியரின் தனிப்பட்ட விருப்பத்திற்காக இந்த விதிகளை மீற முடியாது என்றும் கூறியுள்ளது.
முக்கிய அம்சங்கள்:
- சட்டப்பூர்வ முன்னுரிமை: பென்ஷன் பலன்களைப் பெறுவதில் சட்டப்பூர்வமாகத் திருமணம் ஆன மனைவிக்குத்தான் முதலிடம்.
- விவாகரத்து அவசியம்: முறைப்படி விவாகரத்து பெறாதவரை, மனைவியின் உரிமை அப்படியே தொடரும். கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், பென்ஷன் உரிமையை யாராலும் பறிக்க முடியாது.
- நாமினேஷன் vs சட்டம்: நாமினேஷன் என்பது ஒரு வழிமுறை மட்டுமே. அது அரசு வகுத்துள்ள சட்டப்பூர்வமான பென்ஷன் விதிகளுக்கு மேலானது அல்ல.
இந்தத் தீர்ப்பு, பென்ஷன் மற்றும் டெர்மினல் பலன்களுக்கு இடையிலான வித்தியாசத்தைப் புரிந்துகொள்ள உதவும். ஒரு ஊழியர் மற்ற நிதிச் சொத்துக்களுக்கு வாரிசுகளைத் தேர்வு செய்வதில் சுதந்திரம் இருக்கலாம், ஆனால் அரசு வழங்கும் பென்ஷன் விஷயத்தில் சட்ட விதிகளே இறுதியானவை என்பதை இந்தத் தீர்ப்பு உறுதி செய்கிறது.
