2020-ம் ஆண்டு நடந்த திஷா சாலியன் (Disha Salian) மரணம் தொடர்பான வழக்கை, சிபிஐ (CBI) விசாரிக்க பம்பாய் உயர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. மும்பை போலீசாரின் ஆரம்பகட்ட தற்கொலை வழக்கை அவரது தந்தை எதிர்த்து தொடர்ந்த மனுவின் அடிப்படையில் இந்த நீதிபதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
2020-ம் ஆண்டு நிகழ்ந்த திஷா சாலியன் மரணம் தொடர்பாக, மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) விசாரணையைத் தொடங்க பம்பாய் உயர் நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது. நீதிபதிகள் சாரங் கோட்வால் மற்றும் ரஞ்சித்சிங் ராஜா போன்ஸ்லே ஆகியோர் அடங்கிய அமர்வு, சிபிஐ அமைப்பை எஃப்ஐஆர் (FIR) பதிவு செய்யவும், இந்த விசாரணையை மூத்த அதிகாரி ஒருவரின் மேற்பார்வையில் நடத்தவும் உத்தரவிட்டுள்ளனர்.
செலிபிரிட்டி மேனேஜராக பணியாற்றிய திஷா சாலியன், ஜூன் 8, 2020 அன்று மும்பையின் மலாட் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 14-வது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்தார். அப்போது உள்ளூர் போலீசார், இது தற்கொலை என்று வழக்கை முடித்து வைத்தனர். ஆனால், அவரது தந்தை சதீஷ் சாலியன் இந்த முடிவை தொடர்ந்து மறுத்து வந்தார்.
தனது மகள் தற்கொலை செய்யவில்லை என்றும், இது பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை என்று அவர் குற்றம் சாட்டியிருந்தார். இதையடுத்து, நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு அனுமதி அளித்துள்ளது. விசாரணையின் போது போதிய ஆதாரங்கள் இன்றி யாரையும் குற்றவாளியாகக் கருதக்கூடாது என்றும், ஆதாரம் இல்லை எனில் சிபிஐ இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. பல ஆண்டுகளாக அரசியல் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில், சிபிஐ-யின் விசாரணை அறிக்கை மிக முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.
