உத்தரப் பிரதேச மாநிலம் பரேலியில், ஒரு பெண் தன்னை IAS அதிகாரி என கூறி திருமணம் செய்துகொண்டு, பின்னர் கணவரிடம் ₹40 லட்சம் மற்றும் விவசாய நிலத்தை கேட்டு மிரட்டியுள்ளார். இதனையடுத்து அந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் பரேலியில், சாந்தனா என்ற பெண் தன்னை இந்திய ஆட்சிப் பணி (IAS) அதிகாரி என போலியாகக் கூறி திருமணம் செய்துகொண்டதாக எழுந்த புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது கணவர் அபிஷேக் அளித்த புகாரின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
போலியான சமூக வலைத்தள கணக்குகள் மற்றும் திருத்தப்பட்ட டிஜிட்டல் உள்ளடக்கங்கள் மூலம் தன்னை ஒரு அரசு அதிகாரியாகக் காட்டி, கணவரையும் அவரது குடும்பத்தினரையும் ஏமாற்றியதாகக் கூறப்படுகிறது. விசாரணையில், சாந்தனா தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
திருமணத்திற்குப் பிறகு, சாந்தனாவும் அவரது குடும்பத்தினரும் பணம் கேட்டு மிரட்டத் தொடங்கியதாக கணவர் புகார் தெரிவித்துள்ளார். குறிப்பாக, ₹40 லட்சம் ரொக்கம் மற்றும் தனது விவசாய நிலத்தை எழுதித் தருமாறு வற்புறுத்தியதாகவும், இந்த பணத்தைக் கொண்டு பதாவுன் மாவட்டத்தில் உள்ள ஒரு சொத்தில் மருத்துவமனை கட்ட திட்டமிட்டதாகவும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக, சாந்தனா மற்றும் அவரது தந்தை நரேந்திர பால் சிங், சகோதரர் சூர்யா பிரதாப், தாய் மாமன் ராஜேந்திர சிங் உள்ளிட்ட நான்கு குடும்ப உறுப்பினர்கள் மீது மோசடி, மிரட்டல் மற்றும் இந்திய தண்டனைச் சட்டம், தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் FIR பதிவு செய்யப்பட்டுள்ளது. பெண் UPSC தேர்வுகளில் தேர்ச்சி பெற முயற்சிப்பதாகவும், BSc பட்டம் பெற்றவர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வழக்கு தொடர்பான விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
