உலக அரங்கில் புவிசார் அரசியல் (Geopolitical) கூட்டணிகள் நிதிச்சந்தையின் போக்கையே மாற்றி வருகின்றன. நாடுகள் தங்களின் சுதந்திரத்தை உறுதி செய்யவும், எதிர்ப்பாராத சூழல்களை சமாளிக்கவும், ஏற்கனவே உள்ள அமைப்புகளை தாண்டி புதிய பொருளாதார கட்டமைப்புகளை உருவாக்கி வருகின்றன. இதற்கு மிகச் சிறந்த உதாரணம் இந்தியா, ரஷ்யா, ஐக்கிய அரபு அமீரகத்திற்கு (UAE) இடையே வலுப்பெற்று வரும் உறவு. ஆரம்பத்தில் எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தடைகளை தவிர்ப்பதற்காக உருவான இந்த கூட்டணி, தற்போது ஒரு புதிய பன்முக நிதி அமைப்பை (multipolar financial order) உருவாக்கும் முக்கிய சக்தியாக உருவெடுத்துள்ளது.
வணிகப் பெருக்கம் & டாலருக்கு சவால்
சமீபத்திய ஆண்டுகளில், இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான வர்த்தகம் வியக்கத்தக்க வகையில் உயர்ந்துள்ளது. FY21 இல் சுமார் $13 பில்லியன் டாலராக இருந்த வர்த்தகம், FY25 இல் $69 பில்லியன் டாலரை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மிகப்பெரிய வளர்ச்சிக்கு முக்கிய காரணம் எரிசக்தி ஏற்றுமதிகள். ரஷ்யாவின் கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் இந்தியாவின் பங்கு, 2% இல் இருந்து சுமார் 40% ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம், இந்தியா-UAE வர்த்தகமும் FY21 இல் $43 பில்லியன் டாலராக இருந்தது, தற்போது FY25 இல் $100 பில்லியன் டாலரை தாண்டியுள்ளது. குறிப்பாக, UAE இந்தியாவுக்கு இரண்டாவது பெரிய LNG சப்ளையராக உருவெடுத்துள்ளது.
இவற்றையெல்லாம் தாண்டி, இந்த உறவுகளின் மிக முக்கியமான அம்சம், வர்த்தகத்திற்கான மாற்று தீர்வு முறைகளை (alternative settlement mechanisms) உருவாக்குவதுதான். ரஷ்யா, வர்த்தகத்தால் குவிந்துள்ள இந்திய ரூபாய்களை, இந்தியாவில் உள்ள சிறப்பு நிதிகள் மூலம் முதலீடு செய்கிறது. இது, பாரம்பரிய டாலர் சார்ந்த அமைப்புகளுக்கு ஒரு நேரடி சவாலாக அமைந்துள்ளதுடன், டாலரின் ஆதிக்கத்தை குறைக்கும் (de-dollarization) முயற்சிகளின் ஒரு முக்கிய படியாகவும் பார்க்கப்படுகிறது.
பன்முகத்தன்மை & உள்கட்டமைப்பு வளர்ச்சி
இந்தியா, ரஷ்யா, UAE ஆகியவை எரிசக்தி மட்டுமல்லாமல், மற்ற துறைகளிலும் தங்கள் உறவுகளை விரிவுபடுத்துவது, இந்த கூட்டணிகள் நீண்ட கால நோக்கத்துடன் செயல்படுவதைக் காட்டுகிறது. உலகளவில் பொருளாதாரம் பல மையங்களை நோக்கி நகர்வது (economic multipolarity) ஒரு பொதுவான போக்காக உள்ளது. இதில் அமெரிக்கா, சீனா, ஐரோப்பா, இந்தியா போன்ற பெரிய பொருளாதார சக்திகள் உலக வர்த்தகத்தை பாதிக்கின்றன.
வளைகுடா நாடுகளின் (Gulf region) அரச நிதிகள் (Sovereign Wealth Funds - SWFs) இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, உள்கட்டமைப்பு, சுகாதாரத் துறைகளில் முதலீடுகளை அதிகரித்து வருகின்றன. ADIA, Mubadala போன்ற நிதிகள் இதில் முன்னணியில் உள்ளன.
மேலும், இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடம் (India-Middle East-Europe Economic Corridor - IMEC) போன்ற பிரம்மாண்டமான உள்கட்டமைப்பு திட்டங்களும் முன்னேறி வருகின்றன. இது கண்டங்களை ரயில், கப்பல், எரிசக்தி, டிஜிட்டல் நெட்வொர்க்குகள் மூலம் இணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு திட்டத்திற்கு ஒரு மாற்றாகவும் பார்க்கப்படுகிறது. ஐரோப்பிய யூனியனும் இந்த திட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
சவால்களும், எதிர்காலமும்
இருப்பினும், இந்த புதிய கூட்டணிகளில் சில சவால்களும் உள்ளன. மேற்கத்திய நாடுகளின் கடுமையான தடைகள் மற்றும் இரண்டாம் நிலை தடைகள் (secondary sanctions) வர்த்தக உறவுகளை பாதிக்கின்றன. அமெரிக்காவின் தடைகள் காரணமாக, 2025 இல் ரஷ்யாவிலிருந்து இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி சுமார் 18% குறைந்துள்ளது. இதனால் இந்தியா மீண்டும் அமெரிக்கா மற்றும் UAE நாடுகளை நோக்கி திரும்பியுள்ளது.
IMEC திட்டத்திற்கும் மத்திய கிழக்கில் நிலவும் புவிசார் அரசியல் பதற்றங்கள், இந்தியா-அமெரிக்கா இடையேயான வர்த்தகப் பிரச்சனைகள் போன்ற சவால்கள் உள்ளன. ஐரோப்பிய யூனியனும் வளைகுடா நாடுகளில் சீனாவின் வளர்ந்து வரும் செல்வாக்கையும், தனது உள்நாட்டுப் பிரச்சனைகளையும் சமாளிக்க வேண்டியுள்ளது.
டாலரின் ஆதிக்கம் இப்போதைக்கு குறைய வாய்ப்பில்லை என்றாலும், எதிர்காலத்தில் முக்கிய நாணயங்கள் டாலருடன் இணைந்து முக்கியத்துவம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாடுகள் தங்கள் பொருளாதார சுதந்திரத்திற்காக மாற்று நிதி அமைப்புகளையும், வர்த்தக வழித்தடங்களையும் உருவாக்கி வருகின்றன. வளைகுடா நாடுகளின் நிதிகள் வளர்ந்து வரும் சந்தைகளில் முதலீடு செய்வது, உலக பொருளாதார சக்திகளின் சமன்பாட்டை மாற்றியமைக்கும். முதலீட்டாளர்கள் இந்த மாறும் சர்வதேச நிதிச் சூழலை கவனமாக கையாள வேண்டும்.