PLI திட்டத்தின் கீழ், எலக்ட்ரானிக்ஸ் காம்போனென்ட் உற்பத்தி ஊக்குவிப்பு திட்டத்தின் (ECMP) நான்காம் சுற்றுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மொத்தம் ₹7,100 கோடி முதலீட்டிற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், உள்நாட்டு உற்பத்தி திறனை மேம்படுத்துவதோடு, முக்கிய எலக்ட்ரானிக்ஸ் பாகங்களுக்கான இறக்குமதியை குறைக்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த ஒப்புதலில், உத்திரப் பிரதேசத்தில் Lohum Cleantech நிறுவனம் ₹700 கோடி முதலீட்டில் நாட்டின் முதல் ரேர் எர்த் மேக்னட்ஸ் ஆலையை அமைக்கவுள்ளது. மேலும், Syrma SGS Technology நிறுவனம் ஆந்திரப் பிரதேசத்தில் ₹588 கோடி மதிப்பில் ஃப்ளெக்சிபிள் பிசிபி (Flexible PCB) யூனிட் மற்றும் ₹385 கோடி மதிப்பில் லேமினேட்ஸ் (Laminates) உற்பத்தி ஆலைக்கும் அனுமதி பெற்றுள்ளது. Dixon Technologies, உத்திரப் பிரதேசத்தில் ₹1,100 கோடி முதலீட்டில் டிஸ்ப்ளே (Display) உற்பத்தி திட்டத்தையும், VVDN Technologies ஹரியானாவில் ₹50 கோடி முதலீட்டில் ஹீட் சிங்க் (Heat Sink) யூனிட்டையும் தொடங்குகின்றன.
இந்த திட்டங்கள் மூலம், ரேர் எர்த் மேக்னட்ஸ், கேப்பிடல் எக்ப்மென்ட், லித்தியம்-அயன் செல்கள் போன்ற முக்கிய துறைகளில் ₹85,515 கோடி மதிப்புள்ள உற்பத்தி எதிர்பார்க்கப்படுகிறது. 'மேக் இன் இந்தியா' திட்டத்திற்கு வலுசேர்க்கும் இந்த நடவடிக்கை, மொபைல் அசெம்பிளி துறையில் PLI மூலம் கிடைத்த வளர்ச்சியை, முக்கிய கூறுகளின் (Component Ecosystem) இடைவெளிகளை நிரப்புவதன் மூலம் மேலும் மேம்படுத்தும். இது மின்சார வாகனங்கள் (EV), புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் பாதுகாப்புத் துறைகளுக்கு மிகவும் அவசியம்.
மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், காம்போனென்ட் PLI திட்டத்தின் கீழ் மெதுவான முன்னேற்றம் இருந்தால், ஒப்புதல்கள் மற்றும் பணம் வழங்குவதில் வரம்புகள் விதிக்கப்படும் என எச்சரித்துள்ளார். நிறுவனங்கள் வலுவான இன்-ஹவுஸ் டிசைன் திறன்களில் (Design Capabilities) முதலீடு செய்ய வேண்டும் என்றும், அவ்வாறு செய்யாத நிறுவனங்கள் 'நீக்கப்படும்' என்றும் அவர் கடுமையாக கூறியுள்ளார். உயர் மதிப்புள்ள எலக்ட்ரானிக்ஸ் பாகங்களில் இறக்குமதி சார்ந்திருப்பதைக் குறைப்பதே இதன் நோக்கம்.
இந்த நான்காம் சுற்று ஒப்புதல்களுடன், திட்டத்தின் கீழ் இதுவரை வழங்கப்பட்ட மொத்த ஒப்புதல் முதலீடு ₹61,671 கோடியாக உயர்ந்துள்ளது. அனைத்து சுற்றுகளிலிருந்தும் எதிர்பார்க்கப்படும் மொத்த உற்பத்தி ₹4.51 லட்சம் கோடியை எட்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது இந்தியாவின் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி துறையை மாற்றியமைக்கும் திட்டத்தின் பெரிய இலக்கை காட்டுகிறது.