விலை ஏற்றத்திற்கு என்ன காரணம்?
உலக சந்தையில் நிலவும் பதற்றம், கச்சா எண்ணெய் விலை உயர்வு போன்ற காரணங்களால் செயற்கை ரப்பரின் மூலப்பொருட்களான ஸ்டைரீன் (Styrene) மற்றும் புயூட்டாடையீன் (Butadiene) ஆகியவற்றின் விலைகள் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளன. ஸ்டைரீன் விலை இந்திய சந்தையில் ஒரு டன்னுக்கு USD 1235–1245 ஆகவும், புயூட்டாடையீன் விலை USD 1932/Ton ஆகவும் உயர்ந்துள்ளது. இந்தியாவின் ரப்பர் துறை, குறிப்பாக செயற்கை ரப்பர் வகைகளுக்கு, இறக்குமதியைத்தான் பெருமளவில் நம்பியுள்ளது. முக்கிய செயற்கை ரப்பர் வகைகள் அனைத்தும் இறக்குமதி செய்யப்படுகின்றன. மேலும், நைட்ரில் ரப்பரின் (Nitrile Rubber) 70% தேவையை வெளிநாடுகளே பூர்த்தி செய்கின்றன.
பெரும் நிறுவனங்கள் vs சிறு வணிகங்கள்
இந்த விலை உயர்வு, சந்தையில் உள்ள அனைத்து தரப்பினரையும் ஒரே மாதிரி பாதிக்கவில்லை. டயர் தயாரிக்கும் பெரிய நிறுவனங்கள், ஒப்பந்த விலையின் அடிப்படையில் ஓரளவு விலை உயர்வை 1-4% வரை வாடிக்கையாளர்களிடம் சுமத்த முடிகிறது. ஆயினும், அவர்களுக்கும் மூலப்பொருள் செலவு 15-20% வரை அதிகரித்துள்ளது. ஆனால், திறந்த சந்தையில் செயல்படும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSMEs) நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. இவர்களால் விலை உயர்வை முழுமையாக வாடிக்கையாளர்களிடம் மாற்ற முடியாது. இதனால், இவர்களின் லாபம் கடுமையாக குறைந்துள்ளது. பல நிறுவனங்கள் உற்பத்தியைக் குறைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. மேலும், பழைய விலையில் உள்ள ஆர்டர்கள் மற்றும் கடன் சுழற்சியில் (Working Capital) பெரும் சிக்கல்களை எதிர்கொள்கின்றனர்.
அரசின் தலையீடு அவசியம்!
இந்த இக்கட்டான சூழ்நிலையில், இந்திய ரப்பர் தொழில் சங்கங்களின் கூட்டமைப்பு (All Indian Rubber Industries Association - AIRIA), மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. தற்போதைய சூழலைச் சமாளிக்க, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு கடன் சுழற்சி வரம்புகளை (Working Capital Limits) அதிகரிப்பது, கடன்களை மறுசீரமைப்பது, கொரோனா காலத்தைப் போல தற்காலிக நிவாரணம் வழங்குவது போன்ற உடனடி நடவடிக்கைகள் தேவை என வலியுறுத்தியுள்ளனர். கச்சா எண்ணெய் விலை குறைந்தால் ஒருவேளை தற்காலிக நிவாரணம் கிடைக்கலாம். ஆனால், நீண்டகால அடிப்படையில் இறக்குமதியைச் சார்ந்திருக்கும் நிலை, இயற்கை ரப்பர் விலை உயர்வு, பருவமழை கால பாதிப்புகள் போன்றவை தொடர்ந்து விலை அழுத்தத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. சரியான கொள்கை ஆதரவு இல்லையெனில், MSMEs பெரும் நிதி நெருக்கடியைச் சந்திக்கும் அபாயம் உள்ளது.
