மருந்து துறைதான் முதலிடம்!
இந்திய மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் தான் இந்த மாபெரும் முதலீட்டில் முன்னிலை வகிக்கின்றன. கிட்டத்தட்ட 19.1 பில்லியன் டாலருக்கும் மேல் இவர்கள் முதலீடு செய்ய உறுதியளித்துள்ளனர். இதில், சன் பார்மாசூட்டிகல் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (Sun Pharmaceutical Industries Ltd.) நிறுவனம், ஆர்கானான் & கோ (Organon & Co.) நிறுவனத்தை 11.75 பில்லியன் டாலருக்கு வாங்குவதற்கான திட்டத்துடன் களமிறங்கியுள்ளது. இது சந்தை விரிவாக்கத்தையும், நிறுவனங்களின் ஒருங்கிணைப்பையும் காட்டுகிறது.
இது தவிர, ஆரோபிண்டோ பார்மா (Aurobindo Pharma), பயோகான் (Biocon), சில்பா (Cipla), டாக்டர் ரெட்டிஸ் லேபரட்டரீஸ் (Dr. Reddy's Laboratories), க்ளென்மார்க் பார்மா (Glenmark Pharmaceuticals), கிரானுல்ஸ் இந்தியா (Granules India), லூபின் (Lupin), பிராமல் பார்மா (Piramal Pharma), மற்றும் ஜைடஸ் லைஃப்சயின்சஸ் (Zydus Lifesciences) போன்ற முன்னணி இந்திய மருந்து நிறுவனங்களும் கணிசமான தொகையை முதலீடு செய்ய உள்ளன. அமெரிக்காவில் மருந்து உற்பத்தி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு (R&D), புதிய தொழிற்சாலைகளை அமைப்பது, மருந்து தட்டுப்பாட்டை சரிசெய்வது போன்ற தேவைகளை பூர்த்தி செய்ய இந்த முதலீடுகள் உதவும்.
தொழில் வளர்ச்சி மற்றும் உற்பத்தித் துறை
மருத்துவத் துறையைத் தாண்டி, பிற தொழில் துறை நிறுவனங்களும் அமெரிக்காவில் தங்கள் வர்த்தகத்தை விரிவுபடுத்துகின்றன. ஜே.எஸ்.டபிள்யூ ஸ்டீல் (JSW Steel) நிறுவனம், அதன் ஓஹையோ மற்றும் டெக்சாஸ் ஆலைகளில் நவீனமயமாக்கலுக்காக 255 மில்லியன் டாலர் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. மேலும், மொத்தம் 12 இந்திய நிறுவனங்கள் 1.1 பில்லியன் டாலருக்கும் அதிகமாக புதிய திட்டங்கள் மற்றும் விரிவாக்கங்களை அறிவித்துள்ளன.
குறிப்பாக, அகமதாபாத்தை சேர்ந்த அபியுதய் குரூப் (Abhyuday Group), அமெரிக்காவில் ஐந்து இடங்களில் 900 மில்லியன் டாலருக்கும் அதிகமாக முதலீடு செய்து, சுமார் 1,500 அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க உள்ளது. ஜிண்டால் பைப் (Jindal Pipe) மற்றும் ஜிண்டால் ட்யூபுலர் யுஎஸ்ஏ (Jindal Tubular USA) ஆகியவை டெக்சாஸ் மற்றும் மிசிசிப்பியில் 87 மில்லியன் டாலர் முதலீடு செய்கின்றன. ஜீவோ வெல்னஸ் (Jivo Wellness) தனது அமெரிக்க செயல்பாடுகளுக்காக 15 மில்லியன் டாலர் முதலீடு செய்கிறது. பாலிஹோஸ் இன்க் (Polyhose Inc.) அமெரிக்க கப்பல் கட்டும் தொழில்துறைக்கு ஆதரவாக லாஸ் ஏஞ்சல்ஸில் 2 மில்லியன் டாலர் முதலீடு செய்கிறது.
டெக்னாலஜி மற்றும் எரிசக்தித் துறை
தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்புத் துறையிலும் இந்திய மூலதனம் குறிப்பிடத்தக்க அளவில் முதலீடு செய்யப்படுகிறது. மும்பையைச் சேர்ந்த ஸ்டெர்லைட் டெக்னாலஜிஸ் லிமிடெட் (Sterlite Technologies Ltd.) நிறுவனம், AI மற்றும் தொலைத்தொடர்பு உள்கட்டமைப்பை வலுப்படுத்த 100 மில்லியன் டாலர் முதலீடு செய்ய உள்ளது. இதன் மூலம் சுமார் 500 வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டெக்டோன் சொல்யூஷன்ஸ் (Techdome Solutions), ரோஷை (RoshAi), அட்ரி ஏஐ (Atri AI), கிஸ்ஃப்ளோ (Kissflow), மற்றும் சத்தோரிஎக்ஸ்ஆர் (SatoriXR) போன்ற நிறுவனங்களும் 1.5 மில்லியன் டாலர் முதல் 7.5 மில்லியன் டாலர் வரை பல்வேறு மாநிலங்களில் முதலீடு செய்து, சுமார் 150 வேலைவாய்ப்புகளை உருவாக்கவுள்ளன. எரிசக்தித் துறையில், மேக்னோ இன்னோவேஷன் லேப் (MagnoInnovation Lab) அமெரிக்காவில் தனது செயல்பாடுகளைத் தொடங்க 2 மில்லியன் டாலர் முதலீடு செய்கிறது.
அமெரிக்கா-இந்தியா வர்த்தகத்தை வலுப்படுத்துதல்
இந்த முதலீடுகள் மூலம் ஆயிரக்கணக்கான அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதுடன், விநியோகச் சங்கிலிகள் (Supply Chains) வலுப்பெற்று, உற்பத்தித் திறனும் அதிகரிக்கும். அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் (Sergio Gor) கூறுகையில், இந்த முதலீடுகள் அமெரிக்க சந்தை வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு எவ்வளவு கவர்ச்சிகரமாக இருக்கிறது என்பதற்கு சான்றாக இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும், 2030க்குள் அமெரிக்கா-இந்தியா இடையேயான இருதரப்பு வர்த்தகத்தை 500 பில்லியன் டாலராக இரட்டிப்பாக்குவதே குறிக்கோள் என்றும், நியாயமான, சமநிலையான மற்றும் பரஸ்பரம் நன்மை பயக்கும் வர்த்தகத்தை இலக்காகக் கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
