உலக வங்கியின் 2026 அறிக்கைப்படி, 9 நாடுகள் மட்டும் 167 பில்லியன் கியூபிக் மீட்டர் எரிவாயுவை வீணடித்து, சுமார் **$54 பில்லியன்** ஆற்றல் இழப்பை ஏற்படுத்தியுள்ளன. இது சுற்றுச்சூழல் பாதிப்புடன், எரிசக்தி பாதுகாப்புக்குமான ஒரு பெரிய பின்னடைவு.
என்ன நடந்தது?
உலக வங்கியின் 2026க்கான 'குளோபல் கேஸ் ஃபிளேரிங் டிராக்கர் ரிப்போர்ட்' (Global Gas Flaring Tracker Report) படி, உலகளவில் நடக்கும் எரிவாயு வீணடிப்பில் (Gas Flaring) 83% க்கும் அதிகமாக 9 நாடுகள் தான் காரணம். இந்த நாடுகள் உலக எண்ணெய் உற்பத்தியில் பாதிக்கும் குறைவாக இருந்தாலும், எண்ணெய் எடுக்கும்போது கிடைக்கும் இயற்க்கை எரிவாயுவை வீணாக எரித்துக் கொண்டிருக்கின்றன. 2025ல் மட்டும் உலகளவில் 167 பில்லியன் கியூபிக் மீட்டர் (bcm) எரிவாயு வீணடிக்கப்பட்டுள்ளது, இது 2024ல் இருந்த 157 bcm ஐ விட அதிகம். ரஷ்யா, ஈரான், ஈராக், வெனிசுலா, மெக்சிகோ, லிபியா, அல்ஜீரியா, நைஜீரியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இந்த வீணடிப்பில் முன்னணியில் உள்ளன.
பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் தாக்கம்
எரிவாயு வீணடிப்பு என்பது, தேவையில்லாத இயற்க்கை எரிவாயுவை எரிக்கும் செயலாகும். 2025ல் மட்டும் இது 429 மில்லியன் டன் கார்பன் டை ஆக்சைடுக்கு சமமான உமிழ்வை ஏற்படுத்தி சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை உண்டாக்குகிறது. பொருளாதார ரீதியாகவும் இது மிகப்பெரிய இழப்பு. கடந்த ஆண்டு வீணடிக்கப்பட்ட எரிவாயுவின் மதிப்பு மட்டும் சுமார் $54 பில்லியன் என உலக வங்கி மதிப்பிட்டுள்ளது. இந்தியா போன்ற எரிசக்தி இறக்குமதியை நம்பியிருக்கும் நாடுகளுக்கு, இது ஒரு தவறவிட்ட வாய்ப்பாகும். இந்த எரிவாயுவை சேகரித்து பதப்படுத்தினால், அதிக விலைக்கு இறக்குமதி செய்யப்படும் இயற்கை எரிவாயுவின் தேவையைக் குறைக்க முடியும்.
முதலீட்டுத் தடைகள்
இந்த எரிவாயு வீணடிப்பை நிறுத்துவது தொழில்நுட்ப ரீதியாக கடினம் இல்லை என்றாலும், அதற்கு அதிக செலவாகும். நவீன உள்கட்டமைப்பை (Infrastructure) ஏற்படுத்தி, இந்த எரிவாயுவை சேகரித்து பயன்படுத்த $70 பில்லியன் முதல் $100 பில்லியன் வரை முதலீடு தேவைப்படும் என அறிக்கை மதிப்பிடுகிறது. முக்கிய தடைகளாக, எரிவாயுவை கொண்டு செல்ல குழாய் உள்கட்டமைப்பு இல்லாதது, உள்நாட்டு சந்தையில் போதுமான தேவை இல்லாதது, திட்டங்களுக்கு நிதி திரட்டுவதில் உள்ள சிக்கல்கள் மற்றும் எரிவாயுவை எரிக்கும் நாடுகளில் ஒழுங்குமுறை அமலாக்கம் (Regulatory Enforcement) பலவீனமாக இருப்பது போன்றவை கண்டறியப்பட்டுள்ளன.
உள்கட்டமைப்பு மூலம் முன்னேற்றம்
எல்லா தகவல்களும் எதிர்மறையானவை அல்ல. அமெரிக்காவில் எரிவாயு வீணடிப்பு 7% குறைந்துள்ளது. இதற்குக் காரணம் 'மேட்டர்ஹார்ன் எக்ஸ்பிரஸ்' (Matterhorn Express) குழாய் திட்டத்தின் செயல்பாடு தொடங்கியது. இது போன்ற உள்கட்டமைப்பு திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம், எரிவாயுவை சந்தைக்கு கொண்டு செல்ல வழிவகுத்து, வீணடிப்பைக் குறைக்க முடியும். கஜகஸ்தான் இதற்கு ஒரு சிறந்த உதாரணம். கடுமையான ஒழுங்குமுறை ஆணைகள் மற்றும் நீண்ட கால அரசாங்க அர்ப்பணிப்பு மூலம், 2012 முதல் அதன் எரிவாயு வீணடிப்பை 87% குறைத்துள்ளது.
முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டியவை
எரிசக்தி நிறுவனங்களில் முதலீடு செய்பவர்கள், நிறுவனங்கள் தங்கள் உள்கட்டமைப்பு செலவினங்களையும், சுற்றுச்சூழல் விதிமுறைகளுக்கு இணங்குவதையும் கண்காணிக்க வேண்டும். எரிவாயு சேகரிப்பு தொழில்நுட்பத்தில் முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு ஆரம்ப செலவுகள் அதிகமாக இருந்தாலும், நீண்ட கால செயல்திறன் மற்றும் கார்பன் தொடர்பான வரிகள் அல்லது அபராதங்களில் இருந்து தப்பிப்பதன் மூலம் பயனடையலாம். புதிய குழாய் திட்டங்கள் அல்லது எரிவாயு சேகரிப்பு வசதிகள் குறித்து பெரிய எண்ணெய் நிறுவனங்கள் அறிவிக்கிறார்களா என்பதைக் கண்காணிப்பது, வீணடிப்பைக் குறைப்பதற்கும் எதிர்காலத்தில் செயல்பாட்டு லாபத்தை மேம்படுத்துவதற்கும் ஒரு முக்கிய அறிகுறியாகும்.
