அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் துறை, H-1B விசா வைத்திருப்பவர்கள் வேலை இழந்த பிறகு வழங்கப்படும் 60 நாட்கள் சலுகை காலத்தை (grace period) நீக்குவது குறித்து பரிசீலித்து வருகிறது. இந்த அறிவிப்பு, ஆயிரக்கணக்கான இந்திய ஊழியர்களையும், வெளிநாட்டு திறமையான பணியாளர்களை நம்பியிருக்கும் இந்திய IT நிறுவனங்களையும் கடுமையாக பாதிக்கக்கூடும்.
அமெரிக்க அரசு, H-1B, L-1, O-1 போன்ற முக்கிய விசாவில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு ஒரு பெரிய கொள்கை மாற்றத்தை பரிசீலித்து வருகிறது. அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் துறை (Department of Homeland Security), RIN: 1615-AD22 என்ற எண்ணிடப்பட்ட ஒரு திட்டத்தை ஆய்வு செய்து வருகிறது. இதன் முக்கிய நோக்கம், தற்போதுள்ள 60 நாள் சலுகை காலத்தை (grace period) நீக்குவதாகும். வேலை இழந்த பிறகு, வெளிநாட்டு ஊழியர்கள் புதிய வேலை தேட அல்லது தங்கள் விசா நிலையை மாற்றிக்கொள்ள அல்லது நாட்டிலிருந்து வெளியேற ஏற்பாடு செய்ய இந்த 60 நாட்கள் அவகாசம் வழங்கப்படுகிறது.
இந்திய ஊழியர்கள் மற்றும் IT துறைக்கு என்ன தாக்கம்?
இந்த மாற்றம் இந்திய தொழில்நுட்ப ஊழியர்களுக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். H-1B விசா பெறுபவர்களில் இந்தியர்களே அதிகம், 2024 நிதியாண்டில் மட்டும் சுமார் 71% பேர் இந்தியர்கள்தான். அவர்களுக்கு, வேலை இழப்பு அல்லது ப்ராஜெக்ட் முடிவடையும் சமயங்களில் இந்த அவகாசம் ஒரு பாதுகாப்பு வளையமாக செயல்படுகிறது.
வணிக ரீதியாகப் பார்த்தால், அமெரிக்காவில் கணிசமான கிளைகளைக் கொண்ட இந்திய IT சேவை நிறுவனங்களுக்கு இது புதிய சவால்களை உருவாக்கும். தற்போது, நிறுவனங்கள் இந்த இடைப்பட்ட காலத்தில் பணியாளர்களை மாற்றுவது, வெளிநாட்டு ஊழியர்களை மீண்டும் அனுப்புவது போன்றவற்றைச் செய்கின்றன. இந்த சலுகை காலம் நீக்கப்பட்டால், வேலை நீக்கம் மற்றும் விசா மாற்றங்களை உடனடியாகக் கையாள வேண்டிய அழுத்தம் நிறுவனங்களுக்கு அதிகரிக்கும். இதனால், சந்தைத் தேவைக்கேற்ப பணியாளர்களை நிர்வகிக்கும் திறனில் நிறுவனங்களுக்கு நெகிழ்வுத்தன்மை குறையக்கூடும்.
தற்போதைய நிலை என்ன?
இந்தத் திட்டம் தற்போது வெள்ளை மாளிகையின் மேலாண்மை மற்றும் பட்ஜெட் அலுவலகத்தின் (White House Office of Management and Budget) பரிசீலனையில் உள்ளது. அதாவது, இது இன்னும் சட்டமாகவோ அல்லது அதிகாரப்பூர்வ கொள்கையாகவோ மாறவில்லை. இந்த செயல்முறை உடனடியாக நடக்காது.
மேலும், இந்தத் திட்டம் அதிகாரப்பூர்வமாக Federal Register-ல் வெளியிடப்பட்டால், 30 முதல் 60 நாட்கள் வரை பொதுமக்களின் கருத்துக்களைக் கேட்கும் காலம் தொடங்கும். அப்போது, வணிகங்கள், தொழில் குழுக்கள் மற்றும் தனிநபர்கள் இந்த விதிமுறையின் சாத்தியமான பொருளாதார மற்றும் செயல்பாட்டு விளைவுகள் குறித்து கருத்து தெரிவிக்கலாம்.
முதலீட்டாளர்கள் மற்றும் ஊழியர்கள், Federal Register-ல் இந்த அறிவிப்பு வெளியிடப்படுவதைக் கவனிக்க வேண்டும். அது கருத்துப் பரிமாற்றக் காலத்தின் தொடக்கத்தைக் குறிக்கும். பொதுமக்கள் கருத்துக்கள் மற்றும் அரசாங்கத்தின் அடுத்தகட்ட விவாதங்களுக்குப் பிறகுதான் இறுதி முடிவு எடுக்கப்படும். அதுவரை, தற்போதுள்ள 60 நாள் சலுகை காலத்திற்கான விதிமுறைகளே அமலில் இருக்கும்.
