பலர் தாங்கள் பயன்படுத்தாத ஆப்-களை போனில் இருந்து நீக்கிவிட்டாலும், அதற்கான சந்தா கட்டணம் (Subscription) தொடர்ந்து வங்கியிலிருந்து தானாகவே கழிக்கப்படுகிறது. இதைத் தடுக்க, உங்கள் வங்கி அல்லது UPI செயலியில் உள்ள AutoPay செட்டிங்ஸை மேனுவலாக ரத்து செய்ய வேண்டும்.
UPI AutoPay வசதி மூலம் மின்சாரக் கட்டணம், மியூச்சுவல் ஃபண்ட் SIP மற்றும் OTT சந்தாக்களை செலுத்துவது எளிதாகிவிட்டது. ஆனால், பயன்படுத்தாத சேவைகளுக்குத் தெரியாமலேயே பணம் கழியும் ‘Financial Leakage’ ஆபத்து இப்போது அதிகரித்துள்ளது. உங்கள் பணப்பையை பாதுகாக்க, அவ்வப்போது இந்த ஆட்டோமேட்டிக் பேமெண்ட்களை சரிபார்ப்பது அவசியம்.
ஆப் டெலீட் செய்தாலே போதுமா?
இதுதான் பலருக்கும் இருக்கும் மிகப்பெரிய சந்தேகம். ஒரு மொபைல் ஆப்-ஐ நீக்குவது அல்லது அந்தச் சேவையிலிருந்து விலகுவது என்பது, அதற்கான பேமெண்ட் அனுமதியை (Mandate) ரத்து செய்வதாகாது. இந்த பேமெண்ட் அனுமதி வங்கியின் சிஸ்டத்தில் சேமிக்கப்பட்டுள்ளது. எனவே, ஆப்-ஐ நீக்கினாலும், பேமெண்ட் அனுமதி நீக்கப்படாத வரை வங்கி கணக்கிலிருந்து பணம் தொடர்ந்து கழிக்கப்படும்.
ஆக்டிவ் மேண்டேட்டுகளை சரிபார்ப்பது எப்படி?
உங்கள் UPI செயலியில் உள்ள 'Mandates', 'AutoPay' அல்லது 'Subscriptions' என்ற பகுதிக்குச் செல்லுங்கள். அங்கு எந்தெந்த நிறுவனத்திற்கு, எவ்வளவு தொகை, எவ்வளவு காலத்திற்கு பணம் கொடுக்க அனுமதி அளித்துள்ளீர்கள் என்ற முழு விவரமும் இருக்கும். இதில் தேவைப்படாத சேவைகளை உங்கள் UPI PIN பயன்படுத்தி நேரடியாக ரத்து செய்யலாம்.
குறிப்பாக, UPI AutoPay மூலம் வழக்கமாக ₹15,000 வரையிலான பரிவர்த்தனைகள் அனுமதிக்கப்படுகின்றன. மியூச்சுவல் ஃபண்ட் அல்லது இன்சூரன்ஸ் போன்றவற்றுக்கு வரம்பு இன்னும் அதிகமாக இருக்கலாம். இதைத் தொடர்ந்து கண்காணிப்பது உங்கள் பட்ஜெட்டை சீராக வைத்திருக்க உதவும்.
சேவை ரத்து Vs பேமெண்ட் ரத்து
மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், UPI மேண்டேட்டை ரத்து செய்வது என்பது அந்த நிறுவனத்துடனான சேவையை ரத்து செய்வதற்குச் சமமல்ல. எனவே, சேவையைப் பெற விரும்பவில்லை என்றால், சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் இணையதளம் அல்லது ஆப் மூலம் அதிகாரப்பூர்வமாக அந்தச் சேவையை ரத்து செய்துவிட்டு, பின் வங்கியின் அனுமதியை (Mandate) ரத்து செய்யுங்கள். தவறான கட்டணங்கள் கழிக்கப்பட்டால், உடனடியாக உங்கள் வங்கி அல்லது அந்த நிறுவனத்தைத் தொடர்புகொண்டு சரிசெய்ய வேண்டும்.
