சமீப காலமாக, போலியான கடன் தள்ளுபடி திட்டங்கள் அதிகரித்து வருவதாக ரிசர்வ் வங்கி (RBI) கவலை தெரிவித்துள்ளது. பல தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் என்.பி.எஃப்.சி-க்களில் (Non-banking financial companies) உள்ள கடன் பாக்கிகளை தள்ளுபடி செய்வதாக கூறி மக்களை ஏமாற்றி வருகின்றன. இதற்காக, போலியான 'கடன் தள்ளுபடி சான்றிதழ்களை' (debt waiver certificates) கொடுத்து, சேவை அல்லது சட்ட கட்டணம் என்ற பெயரில் பணம் வசூலிப்பதாகவும் RBI கூறியுள்ளது.
கடன் முறையை சீர்குலைக்கும் மோசடி!
இந்த மோசடி பிரச்சாரங்கள் பொதுமக்களை தவறாக வழிநடத்துவதோடு, நாட்டின் கடன் முறையையும் (credit system) கடுமையாக சீர்குலைப்பதாக RBI குறிப்பிட்டுள்ளது. இத்தகைய செயல்கள் சட்டவிரோதமானவை மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கும். இந்த மோசடிக்காரர்களுடன் பழகுவது நேரடியாக பண இழப்பை ஏற்படுத்துவதோடு, நிதி நிறுவனங்களுக்கும், டெபாசிட்டர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என மத்திய வங்கி எச்சரித்துள்ளது. கடந்த 2023-லும் இது போன்ற அங்கீகரிக்கப்படாத 'கடன் தள்ளுபடி சான்றிதழ்கள்' குறித்து RBI இதேபோன்ற எச்சரிக்கையை வெளியிட்டிருந்தது.
கடன் வழங்குநர்களை நேரடியாக தொடர்புகொள்ளுங்கள்
எனவே, கடன் தொடர்பான அனைத்து கேள்விகளுக்கும், கடன் வழங்குநர்களை (lenders) நேரடியாக தொடர்புகொள்ளுமாறு RBI பொதுமக்களுக்கு வலியுறுத்தியுள்ளது. இதன் மூலம் சரியான தகவல்களைப் பெறவும், நிதி நெருக்கடியில் உள்ளவர்களை குறிவைக்கும் மோசடிகளில் சிக்காமல் பாதுகாப்பாக இருக்கவும் முடியும்.
