பெங்களூருவின் நெரிசலைக் குறைக்க, மைசூரு மற்றும் ஹூப்ளி-தார்வாட் போன்ற நகரங்களில் தொழில் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியை ஏற்படுத்த கர்நாடக அரசு தீவிரம் காட்டி வருகிறது.
கர்நாடக அரசு தனது பொருளாதார வளர்ச்சியை பரவலாக்கும் நோக்கில், 'Beyond Bengaluru' எனும் புதிய திட்டத்தை முடுக்கிவிட்டுள்ளது. பெங்களூருவின் உள்கட்டமைப்பு மீதான அழுத்தத்தை குறைக்கவும், மாநிலத்தின் பிற முக்கிய நகரங்களை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லவும் இந்த திட்டம் ஒரு முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. முதலீட்டாளர்கள் மற்றும் தொழில்துறையினருக்கு இது ஒரு புதிய வாய்ப்பாக அமையும்.
பிராந்திய தொழில் மண்டலங்கள்
இந்தத் திட்டம் ஒவ்வொரு நகரத்தின் தனித்துவமான பலத்திற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது. கர்நாடக டிஜிட்டல் எகானமி மிஷன் மூலம், மைசூரு ஐடி துறைக்கான மையமாகவும், மங்களூரு கடல்சார் வர்த்தகம் மற்றும் டேட்டா சென்டர் மையமாகவும் மாற்றப்பட்டு வருகிறது. அதேபோல், ஹூப்ளி-தார்வாட்-பெலகாவி வழித்தடம் ஏரோஸ்பேஸ், டிஃபென்ஸ் மற்றும் செமிகண்டக்டர் உற்பத்திக்கான முக்கிய களமாக மாற்றப்பட உள்ளது. இதற்காக 2026-31 ஆம் ஆண்டுக்கான ஏரோஸ்பேஸ் கொள்கை சமீபத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளது.
வெறும் திட்டமா? அல்லது செயல்பாடா?
பெங்களூருக்கு வெளியே பல திட்டங்களுக்கு அரசு அனுமதி அளித்திருந்தாலும், முதலீட்டு உறுதிமொழிகளை செயல்பாட்டுக்குக் கொண்டு வருவதே மிகப்பெரிய சவாலாக உள்ளது. வேலைவாய்ப்புகளை உருவாக்க 'Udyoga Sethu' தளத்தை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. எனினும், திறமையான பணியாளர்களை ஈர்க்க மின்சாரம், தண்ணீர் மற்றும் போக்குவரத்து போன்ற அடிப்படை கட்டமைப்புகளை இந்த நகரங்களில் மேம்படுத்துவது அவசியம்.
அரசின் இலக்கு என்ன?
பெங்களூரு மாநிலத்தின் முதன்மை பொருளாதார மையமாக நீடித்தாலும், நீண்டகால வளர்ச்சிக்கு டயர்-2 நகரங்களில் நிலையான தொழில் சூழலை உருவாக்குவது அவசியம். இந்த நகரங்களில் திட்டங்கள் எவ்வளவு வேகமாக செயல்முறைக்கு வருகின்றன என்பதை பொறுத்தே முதலீட்டாளர்களின் ஆர்வம் அமையும்.
