வளர்ச்சி Vs பாதுகாப்பின்மை: இருவேறு முகங்கள்
Economic Survey 2025-26 அறிக்கையின்படி, இந்தியாவின் கிக் எகானமி என்பது ஒரே நேரத்தில் மிகப்பெரிய வளர்ச்சியை சந்தித்துக்கொண்டு, மறுபுறம் அதன் தொழிலாளர்கள் கடுமையான பாதுகாப்பின்மையையும் எதிர்கொள்கிறார்கள். இந்த துறை மொத்த வேலைவாய்ப்பில் 2%-க்கும் அதிகமாக பங்களிக்கிறது.
₹2.35 லட்சம் கோடி ஜிடிபி பங்களிப்பை 2029-30 வாக்கில் இந்த துறை வழங்கும் என கணிக்கப்பட்டுள்ளது. FY21-ல் 77 லட்சம் இருந்த கிக் தொழிலாளர்களின் எண்ணிக்கை, FY25-ல் 1.2 கோடியாக அதிகரித்துள்ளது.
ஆனால், இந்த வளர்ச்சி முகத்திற்குப் பின்னால், கணிசமான தொழிலாளர்கள் மாத வருமானம் ₹15,000-க்கும் குறைவாகவே ஈட்டுகின்றனர். இதனால், கடன் கிடைப்பதிலும், சொந்தமாக சொத்துக்கள் (வாகனங்கள், உபகரணங்கள்) வாங்குவதிலும் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். இவர்கள் பெரும்பாலும் 'Thin-file' கிரெடிட் பிரிவில் வருவதால், வங்கிகள் கடன் தர தயங்குகின்றன.
எந்தெந்த துறைகளில் அதிகம்?
மின்-வர்த்தகம் (E-commerce) மற்றும் லாஜிஸ்டிக்ஸ் (Logistics) துறைகள்தான் கிக் தொழிலாளர்களை அதிகம் வேலைக்கு அமர்த்துகின்றன. இதில், மின்-வர்த்தகம் மட்டும் சுமார் 37 லட்சம் பேருக்கும், லாஜிஸ்டிக்ஸ் 15 லட்சம் பேருக்கும் வேலைவாய்ப்பு அளிக்கிறது. உற்பத்தி (Manufacturing), BFSI துறைகளில் தலா 10 லட்சம் பேரும், சில்லறை வணிகத்தில் (Retail) 7 லட்சம் பேரும் உள்ளனர்.
அல்காரிதம் ஆதிக்கம், தொழிலாளர் தவிப்பு
தற்போது, பிளாட்ஃபார்ம் நிறுவனங்களின் அல்காரிதம்களே (Algorithms) வேலை ஒதுக்கீடு, சம்பள நிர்ணயம், செயல்திறன் கண்காணிப்பு என அனைத்தையும் தீர்மானிக்கின்றன. இது நிறுவனங்களுக்கு லாபகரமாக இருந்தாலும், தொழிலாளர்களுக்கு வெளிப்படைத்தன்மை இல்லாதது, பக்கச்சார்பு, மன அழுத்தம் (Burnout) போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துகின்றன. மேலும், AI போன்ற புதிய தொழில்நுட்பங்களால் வேலைவாய்ப்பு பறிபோகும் என்ற அச்சமும் தொழிலாளர்களிடையே நிலவுகிறது.
சமீபத்தில், டெலிவரி மாடல்களில் உள்ள சிரமங்கள் மற்றும் ஊதிய உயர்வு கோரி தொழிலாளர்கள் நடத்திய போராட்டங்கள், இந்தப் பிரச்சனைகளின் தீவிரத்தை உணர்த்துகின்றன.
அரசின் திட்டங்கள் என்ன?
Economic Survey 2025-26, சமூக பாதுகாப்பு (Social Security) சட்டத்தின் கீழ் கிக் தொழிலாளர்களுக்கும் PF, இன்சூரன்ஸ், மகப்பேறு நலன்கள் போன்றவற்றை கிடைக்கச் செய்ய வலியுறுத்தியுள்ளது. மேலும், வேலை நேரத்திற்கேற்ப குறைந்தபட்ச ஊதியம் (Minimum Wage) நிர்ணயிக்கவும், காத்திருப்பு நேரத்திற்கும் ஊதியம் வழங்கவும் பரிந்துரைத்துள்ளது.
எதிர்காலத்தில் கிக் எகானமி தொடர்ந்து வளரும் என்றாலும், இந்த வளர்ச்சியை சமமாகப் பகிர்ந்தளிக்க, தொழிலாளர்களுக்கு திறன் மேம்பாடு (Skilling), எளிதாக கடன் கிடைத்தல், சொத்து முதலீடுகளுக்கு உதவுதல் போன்ற நடவடிக்கைகள் அவசியம் என அறிக்கை குறிப்பிடுகிறது. இதன் மூலம், கிக் வேலை என்பது ஒரு குறைந்த வருமானத் தேவையாக இல்லாமல், ஒரு நிலையான வாழ்க்கை முறையாக மாறும்.