கொளுத்தும் வெயில் - தொழிலாளர் நலம் கேள்விக்குறி!
இந்தியா முழுவதும் உள்ள ஆடைத்தொழிற்சாலைகளில் நிலவும் உச்சகட்ட வெப்பம், தொழிலாளர்களின் உடல்நலத்தை கடுமையாக பாதித்து வருவது ஒரு புதிய அறிக்கையில் அம்பலமாகியுள்ளது. இது மனித உரிமை மீறல் மட்டுமல்ல, உற்பத்தித்திறன் குறைவு, கொள்கை குறைபாடுகள், நிர்வாக குளறுபடிகள் ஆகியவற்றையும் வெளிச்சம் போட்டுக் காட்டி, இந்தியாவின் முக்கிய ஜவுளித் துறையின் நீண்டகால நிலைத்தன்மைக்கும், சர்வதேச போட்டித்தன்மைக்கும் கடுமையான ESG ஆபத்துக்களை ஏற்படுத்தியுள்ளது.
மனிதப் பாதிப்பும், உற்பத்தித் தடையும்
கணக்கெடுப்பில் பங்கேற்ற 10 பேரில் 9 பேர், தொழிற்சாலைக்குள் நிலவும் அதீத வெப்பம் காரணமாக நோய்வாய்ப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இதில் 87% பேர் தலைவலி, மயக்கம், தசைப்பிடிப்பு போன்ற அறிகுறிகளை எதிர்கொள்கின்றனர். 78.3% பேர் தங்கள் பணிபுரியும் இடம் 'அடுப்பு போல' இருப்பதாக விவரித்துள்ளனர், அங்கு இயந்திரங்களே 99 டிகிரி செல்சியஸ் வரை வெப்பமடைகின்றன. 68.7% தொழிலாளர்கள் வெப்பம் தங்கள் வேலை திறனைப் பாதிப்பதாகக் கூறியுள்ளனர். உற்பத்தி இலக்குகளை அடைய, இடைவேளைகளைத் தவிர்ப்பது, மன அழுத்தத்தை இரு மடங்காக அதிகரிக்கிறது.
பெண்களின் பாதிப்பு இதில் மிக அதிகம். ஆண்களுடன் ஒப்பிடுகையில், பெண்களுக்கு Heat Stress Index (HSI) அளவு 61.5 ஆகவும், ஆண்களுக்கு 18.6 ஆகவும் பதிவாகியுள்ளது. 97% பெண்கள் சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் ஏற்படுவதாகவும், 92% பேருக்கு மாதவிடாய் சுழற்சியில் பாதிப்பு ஏற்பட்டதாகவும் அறிக்கைகள் கூறுகின்றன. குளிர்ந்த தரையில் படுத்து ஓய்வெடுக்கும் தொழிலாளர்கள், மின்விசிறிகள் கேட்க அசிங்கப்படுத்தப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிர்வாகக் குளறுபடிகள் மற்றும் கொள்கை ஓட்டைகள்
இந்த நெருக்கடிக்கு முக்கிய காரணம், நாட்டின் தட்பவெப்பநிலை கொள்கைகளுக்கும், தொழிற்சாலைகளின் நிஜமான சூழலுக்கும் இடையே உள்ள மிகப்பெரிய இடைவெளி. தேசிய மற்றும் மாநில அளவிலான திட்டங்கள், ஆற்றல், விவசாயம், கிராமப்புறங்களில் கவனம் செலுத்துகின்றனவே தவிர, உள்ளரங்கங்களில் நிலவும் வெப்பம் குறித்த பாதுகாப்பு நடவடிக்கைகளை விரிவாக உள்ளடக்கவில்லை. அதே சமயம், தொழிலாளர் பாதுகாப்புக்கு பொறுப்பான மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம், தட்பவெப்பநிலை செயல் திட்டங்களில் பெரிய அளவில் ஈடுபடவில்லை. இதனால், லட்சக்கணக்கான தொழிலாளர்கள் முறையான அங்கீகாரமும் பாதுகாப்பும் இன்றி பாதிக்கப்படுகின்றனர். தொழிற்சாலைகளில் வெப்ப வெளிப்பாடு குறித்த தெளிவான, அமல்படுத்தக்கூடிய தேசிய விதிமுறைகள் எதுவும் இல்லை. சில நகரங்களில் Heat Action Plans இருந்தாலும், அவை நிதிப் பற்றாக்குறை, ஒருங்கிணைப்பு இன்மை காரணமாக செயல்படாமல் உள்ளன. தற்போதைய தொழிலாளர் சட்டங்களில், extreme heat-ல் இருந்து தொழிலாளர்களைப் பாதுகாப்பதற்கான குறிப்பிட்ட பிரிவுகள் இல்லை.
ESG ஆபத்துகள் மற்றும் ஏற்றுமதிப் போட்டி
இந்த மோசமான நிலை, இந்தியாவின் ஜவுளி மற்றும் ஆடைத்துறைக்கு ESG ஆபத்துக்களை பல மடங்கு அதிகரித்துள்ளது. FY 2023-24ல் சுமார் $35 பில்லியன் ஏற்றுமதி செய்த இந்த துறை, உலகளாவிய வாடிக்கையாளர்களின் ESG விதிமுறைகளுக்கு இணங்குவதை கட்டாயமாக்கியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் Carbon Border Adjustment Mechanism (CBAM) போன்ற சர்வதேச விதிமுறைகள், நிலைத்தன்மை (Sustainability) இணக்கமின்மையை வர்த்தக தடைகளாக மாற்றி வருகின்றன. குறிப்பாக, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (SMEs), காலாவதியான இயந்திரங்கள், சீரற்ற சந்தை நடைமுறைகள் காரணமாக இந்த கடுமையான ESG தரநிலைகளை பூர்த்தி செய்ய போராடுகின்றன. இந்த 'நிலைத்தன்மை இடைவெளி' (Sustainability gap) காரணமாக, சர்வதேச சந்தைகளில் இருந்து அவை விலக்கப்படும் அபாயம் உள்ளது.
பொருளாதாரப் பின்னடைவு குறித்த அச்சம்
சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO) கணிப்பின்படி, உடனடி நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், 2030 ஆம் ஆண்டிற்குள் வெப்பம் காரணமாக இந்தியாவில் 35 மில்லியன் முழு நேர வேலைவாய்ப்புகள் இழக்கப்படலாம், மேலும் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 4.5% குறையக்கூடும். உலக அளவில், இந்த வெப்ப அழுத்தத்தால் ஆண்டுக்கு $2.4 டிரில்லியன் இழப்பு ஏற்படலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் ஏற்கனவே, வெப்பம் சார்ந்த உற்பத்தி இழப்புகளால் $100 பில்லியன் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சுமார் 45 மில்லியன் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் ஜவுளித் துறை, அடர்த்தியான தொழிற்சாலைகள் மற்றும் தீவிர உற்பத்தி அழுத்தங்கள் காரணமாக இந்த வெப்பத்தின் தாக்கத்தை மேலும் அதிகரிக்கிறது.
முதலீட்டாளர்களின் பார்வையில் ESG பொறுப்பு
முதலீட்டாளர்கள் பார்வையில், இது ஒரு தெளிவான ESG பொறுப்பு ஆகும். வெப்ப அழுத்தத்திற்கு எதிரான அடிப்படை தொழிலாளர் பாதுகாப்புகளை செயல்படுத்துவதில் தோல்வி, நிர்வாகத்தில் உள்ள குறைபாட்டைக் காட்டுகிறது. இந்தியாவிலிருந்து பொருட்களை வாங்கும் பிராண்டுகள், நெறிமுறை சார்ந்த விநியோகச் சங்கிலியை (ethical supply chains) உறுதிசெய்ய பெரும் அழுத்தத்தை எதிர்கொள்கின்றன. சில மாதிரி தொழிற்சாலைகளை மட்டும் தணிக்கைக்காக (audits) காட்டிவிட்டு, மற்ற பகுதிகள் ஆபத்தான நிலையில் இயங்கினால், அவை நற்பெயர் இழப்பு மற்றும் விநியோகச் சங்கிலி தடைகளுக்கு ஆளாகும். நம்பகத்தன்மை மற்றும் உண்மையான தொழிலாளர் நலனில் அர்ப்பணிப்பு இல்லாதது, நீண்டகால பிராண்ட் மதிப்பை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது. பழைய கூரைகள், போதுமான மருத்துவ வசதிகள் இல்லாமை போன்றவை செயல்பாட்டு திறனற்ற தன்மையை காட்டுகிறது. வெப்பம் சார்ந்த நோய்கள், சிறுநீரக நோய்களுக்கு வழிவகுக்கும் என்ற ILOவின் குறிப்பும், நீண்டகால சுகாதார செலவு மற்றும் பொறுப்புணர்வை அதிகரிக்கிறது. வேலையிட வெப்பம், ஒரு தொழில் நோயாக அங்கீகரிக்கப்படாததும், முக்கிய தொழிலாளர் பாதுகாப்பு சட்டங்களில் இடம் பெறாததும், முறைப்படுத்தப்பட்ட புறக்கணிப்பைக் குறிக்கிறது.
எதிர்கால நோக்கு மற்றும் கொள்கை அவசியம்
இந்த நெருக்கடியைச் சமாளிக்க, ஒருங்கிணைந்த கொள்கை மேம்பாடு மற்றும் தொழிலாளர்களை மையமாகக் கொண்ட தட்பவெப்பநிலை நடவடிக்கைகளை நோக்கி ஒரு அடிப்படை மாற்றம் தேவை. வெப்ப அழுத்தத்தை ஒரு தொழில் நோயாக அங்கீகரித்தல், தொழிலாளர் சட்டங்களில் குறிப்பிட்ட வெப்ப அழுத்தப் பிரிவுகளைச் சேர்த்தல், மற்றும் தட்பவெப்பநிலை மற்றும் தொழிலாளர் அதிகாரிகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் ஆகியவை இதில் அடங்கும். குளிரூட்டும் உள்கட்டமைப்பில் முதலீடு செய்யும், பயனுள்ள வெப்ப செயல் திட்டங்களைச் செயல்படுத்தும், நியாயமான தொழிலாளர் நடைமுறைகளை உறுதிசெய்யும் நிறுவனங்கள், ஆபத்துக்களைக் குறைப்பது மட்டுமல்லாமல், போட்டித்தன்மையையும், ESG முதலீடுகளை ஈர்க்கும் வாய்ப்பையும் பெறும். தட்பவெப்பநிலை நடவடிக்கைகளை ஒரு தடையாகக் கருதாமல், மீள்திறன் கொண்ட தொழில்களையும், நிலையான வாழ்வாதாரங்களையும் உருவாக்குவதற்கான வாய்ப்பாக மாற்ற வேண்டும்.